Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 09 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
இடம் : நியாய ஸ்தலம்.
(நியாபதி வக்கீல், விசாரணை கர்த்தா முதலியோர் உட்கார்ந்து இருக்கிறார்கள்.
வெளியில் சேவகர்கள் கட்டிய தடிகளுடன் நிற்கிறார்கள்)
விசா : அடே சேவகா! பிராது மனுக்கள் கொடுக்க வந்திருப்பவர்களைக் கூப்பிடு.
சேவ : பிராது, மனுக்கள் கொடுக்கிறவர்கள் கொடுக்கலாம். (மூன்று தரம் உரக்கக் கூவுகிறான்)
(விரசேனன் வருகிறான்)
வீர: அடே! சேவகப் பயலே! நான் ஒரு பிராது கொடுக்க வேண்டும். எங்கே நியாயாதிபதி?
சேவ : ஸ்வாமி! இங்கேயே இருங்கள். நான் போய் நியாயாதிபதியிடம் தெரிவிக்கிறேன்.
வீர : ஆகா! அப்படியா! சேவகப் பதரே! நான் இராஜாவின் மைத்துனன் அல்லவா! நான் இவ்விடத்திலா நிற்க வேண்டும்?
சேவ : ஸ்வாமி கோபித்துக் கொள்ள வேண்டாம்.
(சேவகன் நியாயாதிபதியிடம் போகிறான்.)
நியா : இராஜாவின் மைத்துனரா? தூமகேது என்னும் வால் நட்சத்திரம் தோன்றுவது ஏதாவது ஒரு தேசத்தின் நாசத்தைக் காட்டும் என்பார்கள். இந்தப் பிரபு வந்தது யாருடைய கேட்டிற்கு அறிகுறியோ தெரியவில்லை. இருக்கட்டும். இன்றைய தினம் வேறு அவசரமான சில விசாரணைகள் இருப்பதாகவும், நாளைக்கு வரும் படியும் தெரிவித்து அனுப்பு.
சேவ : (வெளியில் வந்து) மகாப் பிரபு இன்றைய தினம் வேறு அவசரமான சில விசாரணைகள் இருப்பதால் நாளைய தினம் வரும்படி உத்தரவானது. நாளைக்கு வாருங்கள்.