நடக்கிறது.
நியா : (தனக்குள் அதோ மாதவராயர் வந்து விட்டார். அவருடைய முகத்தைப் பார்த்து அவர் இவ்விதமான குற்றம் செய்யக் கூடியவர் என்று யார் சொல்லுவார்கள்? ஒரு மனிதனுடைய அகத்தின் அழகை அவனது முகம் கண்ணாடி போலக் காட்டுமல்லவா!
மாத : நியாயாதிபதிகளே! சித்தத்தின்படி இதோ வந்தேன். அடியேனை அழைத்த காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.
நியா : மாதவராயரே வாரும்; இந்த ஆசனத்தில் உட்காரும்.
வீர : ஸ்திரீ ஹத்தி செய்தவரே! வாரும்.
நியா : மாதவராயரே! உமக்கும்! இந்த ஸ்திரீயின் புத்திரிக்கும் நட்புண்டா?
மாத : எந்த ஸ்திரீ?
நியா ” இதோ நிற்பவள் வஸந்தஸேனையின் தாய்.
மாத : (எழுந்து வணக்கமாக) ஓகோ அப்படியா! நான் இது வரையில் பார்த்ததில்லை. அம்மா! ஸந்தஸேனை வீடு வந்து சேர்ந்தாளா?
தாய் : அப்பா குழந்தாய்! இன்னம் வரவில்லை. நீ நீடுழி வாழ வேண்டும். (தனக்குள்) இவர்தாம் மாதவராயரா ஆகா! என் புத்திரியின் பாக்கியமே பாக்கியம். நல்ல சீலரையே விரும்பினாள். என்ன அழகு! என்ன மேன்மைக் குணம் இவர் அவளுக்குக் கிடைப்பாரானால் அவள் ஜன்மம் கடைத்தேறி விடும்.
நியா : மாதவராயரே! இவளுடைய பெண்ணாகிய தாஸி வஸந்தஸேனைக்கும் உமக்கும் நட்புண்டா?
(மாதவராயர் திடுக்கிட்டு வெட்கிக் கீழே குனிகிறார்)