வீர : என்னுடைய விசாரணையை விட மற்றது அவசரமோ? இந்த நியாயாதிபதி முழு முட்டாள். என் சகோதரியின் புருஷனாகிய இராஜனிடம் போய்த் தெரிவித்து இந்தக் கழுதையை வாலறுத்து ஓட்டி விடுகிறேன். (போகிறான்)
சேவ : ஸ்வாமி ஒரு க்ஷணம் பொறுங்கள்; நான் போய் நியாயாதிபதியிடம் மறுபடியும் தெரிவித்துப் பார்க்கிறேன் (உள்ளே போய்) நியாயாதிபதிகளே! அவர் மிகவும் கோபித்துக் கொள்ளுகிறார். இன்றைக்குத் தன் பிராதை விசாரிக்காததைப் பற்றி இராஜாவிடத்தில் தெரிவித்து தங்களை வேலையில் இருந்து நீக்கி வேறு நியாயாதிபதியை நியமிக்கப் போகிறாராம்.
நியா : பாம்பு அற்பமான ஜெந்துவாய் இருந்த போதிலும் அதன் விஷம் எவரையும் கொல்லும் அல்லவோ! நல்லது; அவரை வரச் சொல் அவர் பிராதை விசாரிக்கலாம்.
சேவ : (வெளியில் போய்) மகாப் பிரபு! வரலாம்; உங்கள் பிராதை இன்று விசாரிக்கப் போகிறார்கள்.
வீர : ஓகோ! முதலில் விசாரிக்க முடியாது: இப்பொழுது முடியும். நல்லது, இவன் என்னிடத்தில் கொஞ்சம் பயம் வைத்துக் கொண்டிருக்கிறான். நான் சொல்வதைச் செய்கிறானா இல்லையா பார்க்கலாம்.
நியா: ஐயா! அப்படி உட்கார்ந்து கொள்ளும்.
வீர: சந்தேகம் என்ன? இந்த ஸ்தலமே என்னுடையது. நான் உட்காருவதற்கு உம்முடைய உத்தரவு வேண்டுமோ? எங்கே உட்கார விருப்பமோ அங்கே நானே உட்காருகிறேன். (விசாரணை கர்த்தாவிடம் போய்) இங்கேதான் உட்காருவேன். இல்லை, இல்லை. இன்னம் உயரத்தில் உட்காருவேன். (நியாபாதிபதிக்குப் பக்கத்தில் போய் உட்காருகிறான்.)
நியா : ஐயா! உம்முடைய பிராது என்ன? சொல்லிக் கொள்ளும்.