வீர: தன் வீட்டிற்கா போயிருக்க வேண்டும் ஆகா! என்ன துணிபு? நீ அவளை என்னுடைய சோலைக்கு இரகசியமாய் அழைத்து வந்து கழுத்தை இறுகப் பிடித்துக் கொன்று அவளுடைய நகைகளை அபகரித்துக் கொள்ளவில்லையா? தன் வீட்டிற்குப் போயிருப்பாள் என்று எப்படிச் சொல்லுகிறாய்.
மாத : (காதில் கையை வைத்து மூடிக் கொண்டு) ஆகாகா! ஈசுவரா என்ன வார்த்தைகளைக் கேட்கும்படி வைத்தாய்; இந்த வார்த்தை என் காதில் நாராசம் நுழைந்ததைப் போல் அல்லவோ இருக்கிறது. போதுமையா உம்முடைய விளையாட்டு; நிறுத்தும். இனி எனக்குக் கோபம் உண்டாகும்.
தாய் : ஆகா! என் மகள் இறந்து போய் விட்டாளா? ஐயோ! இனி என்ன செய்யப் போகிறேன். (ஒரு பக்கமாக நின்று அழுகிறாள்)
நியா: (தனக்குள் எவ்வளவோ கீர்த்தி பெற்ற இவர் பேரில் ஒரு சிறிய மாசைக் கற்பிப்பதைக் காட்டிலும், ஹிமய மலையைத் தூக்கி நிறுத்துவதும், சமுத்திரத்திற்குக் கரை கட்டுவதும், காற்றைக் கையால் பிடிப்பதும், எளிதில் முடியும். (உரக்க) எவ்வளவோ கீர்த்தியைப் பெற்ற இவர் இந்தக் குற்றத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டார்.
வீர : அவருடைய கட்சியை நீரே எடுத்துக் கொண்டாற் போல் இருக்கிறதே?
நியா : நடுப் பகலில் சூரியனை எதிர்த்துப் பார்த்தால் நம்முடைய கண்ணொளி மழுங்கி விடாதோ? நெருப்பில் கையை நீட்டினால் கை அல்லவோ எரிந்து போம் அவர் பேரில் அநியாயமாக அவதூறு சொன்னால் தெய்வத்திற்கு சம்மதம் ஆகுமோ? தலையில் இடியல்லவோ விழும் இவர் சாதாரணமான மனிதரா சமுத்திரத்தை ஒத்த தன் ஐசுவரியத்தை எல்லாம் பரோபகாரத்தின் பொருட்டுத் தருமம் செய்து செலவிட்டவரும், சிறந்தவரிற் சிறந்தவரும் தயாள குணத்தையே பூஷணமாக அணிந்தவருமான இவர் கேவலம் அற்பப் பொருளை உத்தேசித்து கொடிய பாதகர் செய்யக் கூடிய இந்தப் பாவத்தை ஒரு நாளும் செய்திருக்க மாட்டார்.
வீர: ஓகோ நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் வேண்டியவர்கள் போல் இருக்கிறது. உமது