மாத : என்ன ஆச்சரியம்! என்ன அநியாயம்! தன் உயிரைக் காட்டிலும் அதிகமாக என்மீது அன்பையும் ஆசையையும் கொண்டவளும், நீதியிலும் அரியவளுமான அந்த சுந்தராங்கியின் சிரத்திலுள்ள ஒரு சிறிய உரோமத்திற்கும் தீங்கு செய்ய எனக்கு மனம் வருமா? என்னையும் என் குணத்தையும் நீங்கள் அறிய மாட்டீர்களா? இன்ப சாகரமாகிய வஸந்தஸேனையைக் கொல்ல அவளுடைய விரோதி கூட நினைக்க மாட்டானே?
வீர : ஐயா! நியாயாதிபதி இந்தக் குற்றவாளியை இனியும் இவ்விடத்தில் உட்கார வைத்தால், நீங்கள் இருவரும் நண்பர்கள் என்று மதிக்கப்படுவீர்கள்.
நியா : மாதவராயரே! எழுந்து நில்லும்.
மாத : நியாயாதிபதிகளே! அப்படியே நிற்கிறேன். நீங்கள் நன்றாய் யோசனை செய்யுங்கள்.
வீர : (மாதவராயருக்கு அருகில் போய் நின்று கொண்டு) ஏ மாதவராயா! என்னைப் பார் நிஜத்தைச் சொல்லி விடு. வஸந்தஸேனையைக் கொன்று விட்டதாக நாணயமாக ஒப்புக் கொள்.
மாத : துஷ்டா! என்னுடன் பேசாதே; போ அப்பால். (தனக்குள்) என்னுடைய உண்மை மித்திரம் ஸோமேசன் இந்த அவதுறைக் கேட்டால் எப்படி விசனப்படுவானோ? மேலான குலத்தில் உதித்த பரிசுத்த ஸ்வரூபியான என் அரிய நாயகி இதைக் கேட்க சகிப்பாளோ? ஆகா குழந்தாய் உன்னுடைய பாலிய விளையாட்டில், உன் பிதாவுக்கு வந்திருக்கும் மானக் கேட்டை நீ எங்கே அறியப் போகிறாய்? எனக்கு இந்த மான ஹானி வந்ததைப் பற்றிக்கூட நான் வருந்தவில்லை. இதனால் என் உயிர் போவதாய் இருந்தாலும் கவலை இல்லை. பதிவிரதா சிரோன்மணியான வஸந்தஸேனை உயிருடன் இருக்க வேண்டும் என்பதுதான் என் மனதை வருத்தி வதைக்கிறது. அவள் உண்மையில் இறந்திருப்பாள் என்பதை என் மனது இன்னமும் நம்பவில்லை. அவள் என் குழந்தைக்குக் கொடுத்து விட்டுப் போன ஆபரணங்களைத் திரும்ப அவளிடம் கொடுத்து விட்டு வரும்படி ஸோமேசனை அனுப்பினேன். அவனும் திரும்பி வரவில்லை. ஈசுவரா! கருணாநிதே! என்ன செய்யப் போகிறேன்.