நியா : மாதவராயரே! நிஜத்தைப் பேசும்; இல்லாவிட்டால் துன்பம் வந்து சம்பவிக்கும்.
மாத : சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே பொய் என்றால் பிறகு நான் சொல்வதில் பயன் என்ன? குற்றம் என்பதே இன்னது என்று அறியாத குலத்தில் உதித்த நான் என் முன்னோர்களுக்கு அவமானம் வரக்கூடிய காரியத்தை ஒரு நாளும் செய்பவனல்ல. குற்றமற்றவனைக் குற்றவாளியென்று ஸந்தேகித்தால், வருவதை நான் அனுபவிக்க வேண்டுவதுதான் முடிவு.
வீர : இன்னம் ஸந்தேகமாக ஏன் பேச வேண்டும்? கொன்றேனென்று சொல்லி விடு.
மாத : எனக்குப் பதிலாக நீர்தாம் சொல்லி விட்டீரே! நான் கூடச் சொல்ல வேண்டுமா?
வீர : கேட்டீர்களா இவரே ஒப்புக் கொள்கிறார்; இவர் வாக்குமூலத்தினாலேயே சந்தேகம் நீங்கிவிட்டது. இனி தண்டனை விதிக்கலாம். ஐயோ பாவம்! மாதவராயரைப் பார்க்க எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது! இவர் இந்தக் குற்றம் செய்யாமல் இருந்தால் நன்றாய் இருக்கும். இதை வேறு யாராயினும் செய்திருக்கலாகாதா?
நியா : மாதவராயரே! இப்பொழுது ஏற்பட்ட சாட்சியங்களால் நீர் வஸந்தஸேனையைக் கொன்று இருக்கலாம் என்று ஸ்ந்தேகம் ஏற்படுகிறது நீர்கொல்லவில்லை என்பதற்கோஅல்லது வேறு யாராவது அவளைக் கொன்றார்கள் என்பதற்கோ உமக்கு சாட்சிகள் இருக்கிறார்களா?
மாத : இந்த ஆபரணங்களை வஸந்தஸேனை கொடுத்தாள் என்பதற்கு என் பணிப் பெண் சாட்சி இருக்கிறாள். தவிர, இன்று காலையில் இருந்து, என்னுடைய நண்பன் ஸோமேசன் என்னுடன் கூடவே இருந்திருக்கிறான். இவ்விருவரும் தான் சாட்சிகள்.
வீர: இவர்கள் உனக்கு அனுகூலமானவர்கள். உன் வேலைக்காரியும், நண்பனும் உன் உயிரைத் தப்புவிக்க ஏன் பொய் சொல்ல மாட்டார்கள்? ஆகையால் இவர்களுடைய சாட்சியம் சிறிதும் உபயோகம் இல்லை. நியாயாதிபதி! நீர் இவர்களை விசாரித்த போதிலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்.