நியா : மாதவராயரே! இவர்களைத் தவிர வேறு சாட்சிகள் இருக்கிறார்களா?
மாத : இல்லை.
வீர : அப்படியானால் நியாயாதிபதி இனி தண்டனை விதிக்க வேண்டியதுதான்.
தாய் : ஐயோ! என் அருமை மகனே! உனக்கு என்ன பொல்லாத காலமோ தெரியவில்லையே! நல்ல மனிதருக்கு இப்படியும் ஆபத்து வருமோ? நியாயாதிபதிகளே! என் மகளுக்காக இந்தப் பிராதில் நான் அல்லவோ வாதியாக வரவேண்டும்? இவர் பேரில் எனக்கு யாதொரு வியாச்சியமும் இல்லை. இவரை விட்டு விடுங்கள்.
வீர : கிழப் பிணமே! போ அப்பால்! எங்களுக்குத் தெரியாததற்கு நீயே சொல்லிக் கொடுக்கிறாய்!
நியா : கொலைக் குற்றத்திற்கு சர்க்காரே வாதி. ஆகையால், உன்னைப் பற்றிக் கவலை இல்லை. நீ போகலாம்.
தாய் : இதென்ன அநியாயம்! யாதொரு குற்றத்தையும் செய்யாத புண்ணிய புருஷர் மீது அடாப்பழி சுமத்துகிறார்களே! இது தெய்வத்திற்கு சம்மதமாகுமோ? நியாயாதிபதிகளே இது தர்மமல்ல என் மகள் ஏதோ தலை விதியினால் இறந்தாள். அதற்காக யாதொரு களங்கமும் அற்ற உத்தம குணமுடைய இவரைத் தண்டிக்க வேண்டாம். விட்டு விடுங்கள்.
நியா : சரி! நீ போகலாம்.
(சேவகர்கள் அவளை வெளிப்படுத்துகிறார்கள்)
வீர: நேரமாகிறது! தண்டனை விதியும்.
நியா : ஐயா! இது கொலைக் குற்றம்; அதிலும் குற்றவாளி பிராம்மணர். ஆகையால் இதை நான் தீர்மானித்தல் கூடாது. மனு நீதிப்படி இதில் அரசனே தீர்மானம் சொல்ல வேண்டும்.