ஆகையால் என்னுடைய விசாரணை கர்த்தாவை நான் அரசனிடம் அனுப்பி, விசாரணையில் ஏற்பட்ட விஷயங்களைத் தெரிவிக்கச் சொல்லுகிறேன். (விசாரணை கர்த்தாவை நோக்கி) நீர் உடனே அரசனிடம் போய், விவரங்களைத் தெரிவித்து அவருடைய தீர்மானத்தை அறிந்து வாரும். பிராம்மணர் கொலைக் குற்றம் செய்தால், அவரைக் கொல்லக் கூடாதென்றும், அவரை இந்தத் தேசத்தை விட்டு வேறு தேசத்திற்கு அனுப்பிவிட வேண்டும் என்பதும் சாஸ்திரம் என்று தெரிவியும்.
வீர (தனக்குள் அப்படியானால் நான் முன்னால் அரசனிடம் போய் அவனை சரிப்படுத்தி வைக்கிறேன். (போய் விடுகிறான்)
வி-க : உத்தரவுப்படி செய்கிறேன்.
(போய்த் திரும்பி வந்து), நியாயாதிபதிகளே! அரசனிடம் தெரிவித்தேன். வஸந்தஸேனையின் ஆபரணங்களை இவர் கழுத்தில் போட்டு இவருக்கு எருக்க மாலை அணிவித்து பறை முழக்கத்தோடு இவரை ஊரைச் சுற்றி அழைத்துக் கொண்டு போய் ஊருக்கு வெளியில் உள்ள மைதானத்தில் கழு மரத்தில் ஏற்றும்படி உத்தரவு பிறப்பித்தார். இவ்விதக் குற்றத்தை இனி ஜனங்கள் செய்யாமல் இருக்க, இது ஒரு உதாரணமாக இருத்தல் வேண்டுமாம்.
ஸோ ; ஹா! தெய்வமே! (மாதவராயர் மீது சாய்கிறான்)
மாத : யோசனையும் நியாயமும் இல்லாத அரசன் இப்படித்தான் துற்புத்தி மந்திரிகளின் உபதேசத்திற்கு இணங்கி அக்கிரமங்களைச் செய்து நாசமடைகிறான். யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே! கேடு வரும் பின்னே மதி கெட்டு விடும் முன்னே! விதியின் வலியைத் தடுக்க யாரால் முடியும்? முன் ஜென்மத்தில் நான் செய்த பாவத்தினால் இது சம்பவித்தது. இதைப் பற்றி யார் பேரில் குற்றம் சுமத்துகிறது? ஆகையினால் நண்பா! கவலைப்படாதே! என்ஆருயிர்மித்திரா! நான் போகிறேன். இதுவரையில் நீ என் மீது வைத்திருந்த அன்பை மறந்து விடாதே! ஆதரவற்ற என் குடும்பத்தை உன் வசத்தில் ஒப்புவித்தேன். என் மனைவியையும் குழந்தையை யும் இனி நீ தான் காப்பாற்ற வேண்டும்.
ஸோ : ஐயா! மித்ர ரத்னமே! அடிவேர் போன பின் மரம் உயிருடன் இருப்பதும் உண்டோ? ஒரு நாளும் இல்லை. உங்களுக்கு முன் என் உயிர் இதோ போய் விடும் போலிருக்கிறது.