ஏமாற்றவா பார்க்கிறாய்? உன்னை நான் ஏமாற்றுகிறேன் பார்! (வீரசேனன் புஷ்பங்களை எடுத்துத் தன் பேரில் அணிந்து கொள்கிறான்.) வஸந்தஸேனை! என் அருகில் வா கண்மணி! ஏன் என் பேரில் உனக்கு இவ்வளவு கோபம் வாவா! போதும்! என் கண்ணாட்டி அல்லவோ! எங்கே ஒரு முத்தம் கொடு.
தோழ : (தனக்குள்) சரி அவள் பேரில் காதலைத்தான் காட்டுகிறான்; சந்தேகமில்லை! நான் இனிமேல் நிற்பது பிசகு; போகிறேன். (போப் விடுகிறான்)
வீர : அடி வஸந்தஸேனை, உனக்கு எவ்வளவு ஐசுவரியம் தேவையான போதிலும் சரி, மழைப் போல வருவிக்கிறேன்; உன்னையே என் குலதெய்வமாக மதித்துக் கொண்டாடுகிறேன். என் தலைப் பாகையை உன் காலடியில் வைத்து வணங்குகிறேன். எங்கே என் அருகில் வா!
வஸ: விருத்தம் – தோடி
ஐயனே! வீணிலென்னை யலைத்துநீர் வருத்து கின்றீர்!
தையலர் மனதை நீவிர் சற்றெனு மறியீர் போலும்.
வைதெனை யுரப்பியென்ற னன்பினைப் பெறுத லாமோ?
கைதவ நினையா திந்த ஆசையை விடுப்பீ ரின்றே.
ஐயா! நீர் எவ்வளவுதான் தெரிவித்த போதிலும் எனக்கு உம்மீது சற்றும் விருப்பம் உண்டாகவில்லை. உம்முடைய செல்வம் யாருக்கு வேண்டும்? தாமரைப் புஷ்பத்தின் இதழ்களில் சேறு படிந்து அழுக்கடைந்து இருந்த போதிலும், வண்டுகள் அந்தப் புஷ்பத்தை விட்டு அகலாது அல்லவோ! அதைப் போல ஏழ்மைத் தன்மையோடு கூடியிருந்த போதிலும் யோக்கியதா பட்சம் யாரிடத்தில் இருக்கிறதோ அந்தப் பூமானையே என் மனம் நாடுகிறது! அவருக்கு நான் ஒருக்காலும் வஞ்சம் செய்ய நினைக்க மாட்டேன். என்னை வீணில் வருத்துவதில் என்ன பயன்?
வீர :ஆகா! அப்படியா கேவலம் நித்திய தரித்திரனாகிய மாதவராயனை என்னைக் காட்டிலும்