வீர : அடே போக்கிரிப் பயலே! நான் உன்னுடைய எஜமானனல்லவா?
பத்ம : ஸ்வாமி உண்மைதான். தாங்கள் என் சரீரத்திற்கு எஜமானே. ஆனால் என்னுடைய பாவ புண்ணியத்திற்கு நான் தானே எஜமான். இதைச் செய்ய என் மனமும் கையும் துணிய வில்லை. மன்னிக்க வேண்டும்.
வீர : என்னுடைய வேலைக்காரனாகிய நீ வேறு எவனுக்கு இப்படிப் பயப்படுகிறாய்?
பத்ம : வருங்காலத்திற்கு.
வீர : வருங்காலமென்பவன் யாரடா அவன்? பத்ம அவன் நம்முடைய நன்மை தீமைகளுக்குத் தகுந்த விதம் நமக்குப் பதில் செய்பவன்.
வீர : நன்மை செய்தால் என்ன பதில் கிடைக்கும்?
பத்ம : தங்களுடையதைப் போன்ற செல்வமும் சிறப்பும் கிடைக்கும்.
வீர : தீமைக்கு?
பத்ம : என்னைப் போல அடிமைத் தொழில் செய்வதே அதற்குப் பலன். ஆகையால் மேலும் தீமை செய்ய மாட்டேன்.
வீர: உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவரை அது அடிமையாக்கும். நீதான் அடிமையாய் இருக்கிறாயே. உன்னை அது என்ன செய்யப் போகிறது? பயப்படாதே. நான் சொல்வதைச் செய்.
பத்ம : நல்ல ஸ்திதியில் இருப்பவர்கள் அடிமையானால் அடிமை இன்னும் எந்த விதமானதாழ்ந்த நிலைமைக்குப் போக வேண்டுமோ! அதை நாம் ஊகித்துக் கொள்ள வேண்டாமா?