பத்ம : ஸ்வாமி உண்மையைச் சொல்லுகிறேன். நான் வந்த போது வெற்றிலை பாக்கை எடுத்துக் கொண்டு வர மறந்து விட்டேன். வண்டியை மாதவராயருடைய வீட்டின் வாசலில் சற்று நிறுத்தி விட்டு, சமீபத்தில் இருந்த கடைக்குப் போய், வெற்றிலை முதலியவற்றை வாங்கிக் கொண்டு வந்தேன். அந்தச் சமயத்தில் அவர் வீட்டிற்கு உள்ளேயிருந்து இந்த ஸ்திரீ வந்து தவறுதலாய் வண்டியில் ஏறிக் கொண்டாள் போல் இருக்கிறது!
வீர : தவறுதலாகவா வந்தாள்? ஆனால் என்னை நாடி வர வில்லையா? அடி வஸந்தஸேனை கீழே இறங்கு, இந்த வண்டி என்னுடையது என்பது தெரியாதோ? நான் மாத்திரம் உனக்குப் பிடிக்கவில்லை. என் வண்டி மாத்திரம் நன்றாய் இருக்கிறதா? இறங்கு கழுதை, இல்லாவிட்டால் எட்டி உதைப்பேன்.
வஸ : ஐயா! மன்னிக்க வேண்டும். நான் மாதவராயருடைய சோலைக்குப் போகிறேன். இது அவருடைய வண்டி என்று ஏறி விட்டேன்.
வீர : அந்த நித்திய தரித்திரனிடம் போக என் வண்டியை உபயோகித்துக் கொண்டாயோ நாயே? இறங்கு கீழே!
வஸ : எது உமக்கு இகழ்வாகத் தோன்றுகிறதோ அது எனக்கு மிகவும் மேன்மையாகத் தோன்றுகிறது. அவரவர்களின் விருப்பம்! எல்லாம் தலை விதியின்படி நடக்கிறது.
வீர : விருத்தம் - மோகனம்
வேசையே வஸந்தசேனை! பிடிவாதம்விடுத்தா யில்லை,
காசையே மதிக்குந் தாஸி யகத்தினிலுதித்துங் கற்பி
லாசையே வைத்தாயென்று மன்னியர் வதனங் காணக்
கூசுமோர் நீர்மை பெற்ற குலமக ளெனவே சொற்றாய்!