ஸ்வாமி உன்னுடைய நற்குணத்திற்குத் தகுந்த நற்கதி அளிப்பார். உன் கடமையை நீ செய்து விட்டாய்; எழுந்திரு.
வீர : ஹே! சண்டாளப் பயல்களா! ஏன் இப்படித் தாமசம் செய்கிறீர்கள்? உடனே அழைத்துப் போய் இராஜனுடைய கட்டளையை நிறைவேற்றுங்கள். இனித் தாமதித்தால், நீங்களும் தண்டனை பெறுவீர்கள்.
சிசு : ஐயோ! என் தந்தையை விட்டு விடுங்கள். அவருக்குப் பதிலாக நான் போகிறேன்.
வீர : இரண்டு பேரையும் கொன்று விடுங்கள். அப்பனும் மகனும் கூண்டோடு கைலாசம் போகட்டும்.
மாத : இவனுடைய இச்சைப்படியே எல்லாம் நடக்கிறது! அப்பா கண்மணி! நீ உன் தாயாரை அழைத்துக் கொண்டு இந்த ஊரை விட்டு என்னால் உண்டான இந்த அவமானம் காதில் படாத வேறோரிடத்திற்குப் போய் செளக்கியமாக இருங்கள். மித்ரா இவனை அழைத்துக் கொண்டு போ.
ஸோமே : (விசனத்துடன்) ஐயா! உமக்குப் பிறகு நான் உயிருடன் இருப்பேன் என்று நினைக்க வேண்டும்.
மாத : ஸோமேசா! ஜீவாத்மா நம்முடைய கைக்குட்பட் டது அல்ல. உன்னுடைய உயிரை விடவும், வைத்துக் கொள்ளவும், நீயா அதற்கு நாதன். அதற்கு அதிகாரி வேறு ஒருவன் இருக்கிறான். இந்த உலகத்திற்கு வந்த காரியம் முடியும் வரையில் எவனும் இதை விட்டு ஈசுவரனுடைய அனுமதியின்றிப் போக முடியாது. அவசரப்படாதே. நன்றாய் யோசனை செய்து பார். அநாதையான இவர்களை, நீ காப்பாற்ற வேண்டும். என் னுடைய கடைசி வேண்டுகோளைச் செய். நேரமாகிறது, போ!
ஸோமே : (தனக்குள்) இவர் சொல்வது நியாயமாய் இருந்த போதிலும், இவர் இறந்தபின் நான் இதை எப்படி சகித்துக் கொண்டிருப்பேன்? முதலில் இவருடைய மனைவியைத் தேற்றி விட்டுப் பிறகு என் உயிரை விடுகிறேன். (அவரை நோக்கி) சரி ஸ்வாமி! இதுதான் கடைசியாக உங்களுடைய சுந்தர முகத்தை நான் பார்ப்பதோ?