2 சண்: அடியாத்தே! புதுமையாக்கீதே! நீ சொல்றது. நெசந்தானாய்யா?
பத்ம : சத்தியம்; நான் நியாய ஸ்தலத்திலேயே இதைச் சொல்லியிருப்பேன். என்னை என் எஜமானன் ஒரு அறைக்குள் விட்டுப் பூட்டி விட்டார்.
(வேறொரு பக்கமாக வீரசேனன் ஏப்பம் விட்டுக் கொண்டு வருகிறான்)
வீர : (தனக்குள்) இன்றைக்கு முதல் தரமான சாப்பாடு! வயிற்றைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லையே! என் விருப்பத்திற்கு இணங்காத வஸந்தஸேனையை ஒழித்தேன்! அவள் ஆசை வைத்த மாதவராயன் பேரில் பழியைச் சுமத்தினேன். இது ஸுதினமானதால், நல்ல விருந்து சாப்பிட்டேன். அதோ சண்டாளர் அவனை அழைத்துக் கொண்டு போகிறார்கள். நானும் அவனைக் கொல்வதைப் பார்த்து என் கண்களுக்கும் விருந்து செய்விக்கிறேன். (கொஞ்சதுரம் போய்) அதோ பத்மநாபன் போகிறானே அவனை நான் சிறையில் அல்லவோ அடைத்து வைத்திருந்தேன்! அவன் உண்மையை வெளியில் சொல்லி விடுவானோ என்னவோ தெரியவில்லையே! நானும் போய் சமயத்திற்குத் தகுந்த விதம் நடந்து கொள்ளுகிறேன். (வருகிறான்)
பத்ம : இதோ வந்தார் என் எஜமானர்!
1-2 சண் : சாமி தெண்டம்!
வீர: அடே பத்மநாபா நீ எங்கே போகிறாய்? வா என்கூட.
பத்ம : நல்ல யோக்கியர்! வஸந்தஸேனையை கொன்றதும் அன்றி, மகா உத்தமரான மாதவராயரையும் கொல்ல வழி தேடினீரோ)
வீர : அடே! எவ்வளவோ யோக்கியனான நானா ஒரு ஸ்திரீயைக் கொல்வேன்? .
ஜனங்கள் : ஆம்! நீதான் அவளைக் கொன்றவன்; மாதவராயர் அல்ல.