என்ன கதிக்கு ஆளாக்கினாய்! என்ன கர்ன கடூரம்! இம் மொழிகள் என் காதில் விழ நான் என்ன மகா பாவம் செய்தேனோ என் தந்தை தன் கச்சேரிக்குப் போனது வீதியில் அவர் வரவைக் கட்டியக்காரர் புகழ்ந்து தெரிவித்ததற்குப் பதிலாக எனக்கு இவ்விதமான கீர்த்தி ஏற்பட்டதோ! ஹா! புண்யாத்மாவாகிய என்னுடைய தந்தையின் பெயரைக் கெடுக்கப் பாதகனாகிய நானேன் பிறந்தேன்? கம்பீரச் சின்னங்களுடன் என் பிதா இந்த வீதியில் போன காலத்தில், தன் மகனுக்கு இதே இடத்தில் இவ்வித மரியாதை கிடைக்கப் போவதை அறிந்திருப்பாரானால், அவருடைய பெருமையும் குதூகலமும் எங்கு போயிருக்கும்! ஓகோ! அதோ என் மித்திரன் ஸோமேசனும், என்னருமைக் குழந்தை சிசுபாலனும் வருகிறார்கள். (சண்டாளரிடம்) நண்பர்களே! நீங்கள் எனக்கு ஒரு அனுமதி தரவேண்டும்.
1 சண் : என்னையா ஓனும்? சொல்லையா ஒடனே தாரோம். உங்க நல்ல கொணம் ஒண்ணே போதுமே! நம்ம ராசாவுக்குக் கூட ஒன்னொட ரோக்கிதே வருமா? கேளையா.
2 சண் : எத்தினி தரம் எங்களுக்குக்கூட! சோறு துணியெல்லாம் ஒங்க வளவலேந்து கெடச்சதே! அதெல்லாம் மறப்பமா? நாங்க சின்ன சாதிப் பறையராய் இருந்தாலும், நீங்க சேஞ்ச ஒவகாரம் நெனைக்காமப் போனா குடிக்கிற கஞ்சீலே ஆண்டவன் மண்ணு போட மாட்டாரா?
மாத : அதோ என் குழந்தை வருகிறான், அவனுடன் கடைசியாக ஒரு முறை பேச அனுமதி தரவேண்டும்.
1 சண் : இத்தானா பெரமாதம்! பேசுங்க சாமி! செனங்கள் எல்லாம் அப்பாலே போங்க, கொழந்தைக்கு வளி வுடுங்க.
(ஸோமேசனும் சிசுபாவனும் வருகிறார்கள்)
ஸோ : குழந்தாய்! அதோ பார் உன் பிதாவை.
சிசு : ஹா! அப்பா! அப்பா! (ஆவலோடு தகப்பன் பேரில் விழுகிறான்)
மாத : வாடா! என் செல்வமே. (வாரி அணைத்து அவன் கையைப் பிடித்துக் கொண்டு) ஆகா,