“அவுங்க நூறு வருஷம் நல்ல ஆரோக்கியத்தோட இருக்கணும்னு நா நினைக்கறதாலதான் நா கஷ்டப்பட்டாலும் பரவாயில்லைன்னு வேலைக்குப் போறேன். எல்லாம் உங்க சந்தோஷத்துக்காக தான். ஆனா உங்க மனசு எனக்கு இப்போதான் புரிஞ்சுது. ஏதோ ஒரு சின்ன காரணம் கிடைச்சா கூட நீங்க என்னை வெளியே அனுப்பத் தயங்க மாட்டீங்க. ஏன்னா உங்களுக்கு என் மேல துளி கூட அன்பு இல்லை"
ஜெயசீலனுக்கு குற்ற உணர்வு அதிகமானது. ‘எப்படிப்பட்ட பெண்ணை காயப்படுத்தி இருக்கிறேன்? அவளை இப்போது எப்படி சமாதானப் படுத்துவது. அவள் என்னை மன்னிப்பாளா?’
“சரி வழியை விடுங்க, நா கிளம்பனும். உங்க அம்மாவை நீங்களே நல்ல விதமா கவனிச்சிக்கோங்க”.
சட்டென அவள் கையிலிருந்த பெட்டியை பிடுங்கிகொண்டான் ஜெயசீலன்.
" சாரிம்மா திவ்யா. உன்னை நா சரியா புரிஞ்சுக்கலை. நீ வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் திமிரா நடக்கறியோன்னு தப்பா நினைச்சுட்டேன். என்னை மன்னிச்சுடு. உன்னை நான் சந்தேகப் படவே மாட்டேன். என் தாயின் நலத்துக்காக நானே கூட இந்த அளவுக்கு யோசிக்காத போது நீ எவ்வளோ திட்டம் போட்டு வேலை செஞ்சிருக்கே. இனி நீயே கிளம்பினாலும் உன்னை நான் அனுப்ப மாட்டேன். என்னை விட்டுப் போயிடாதே ப்ளீஸ் " கண் கலங்க அவன் கெஞ்சவும் அதற்குமேல் தாங்க முடியாமல் உள்ளே போகத் திரும்பினாள் திவ்யா.
வெளியே நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பார்வதியும் தான் தேர்ந்தெடுத்த மருமகள் சோடை போகவில்லை என்று மனதுக்குள் பெருமிதம் அடைந்தாள்.
{kunena_discuss:785}