(Reading time: 6 - 11 minutes)

சிறுகதை - பொதுக்குழு கூட்டம்! - ரவை

general_meeting

ஞாயிறு காலை பத்துமணி! தொகுதி குடியிருப்போர் சங்கத் தலைவர், வீட்டின் கதவைத் திறந்து, வெளியே உள்ள பந்தலில் மக்கள் எத்தனைபேர் திரண்டிருக்கிறார்கள் என்று பார்க்க ஆவலுடன், வெளியே வந்தார்.

 பந்தலில் ஒருவரும் இல்லை!

தலைவர் அதிர்ச்சியிலும் சிறிது சிந்தித்தார்!

 நம்மூரிலே, நேரம் தவறாமை என்கிற பண்பாடே பூஜ்யம்! பத்துமணிக்கு கூட்டம் என்றால், பத்து நிமிஷம் முன்பே வரவேண்டாமோ? யூஸ்லெஸ் ஃபெலோஸ்!

 தெருவின் இருபக்கமும் நோட்டம் விட்டார். ஞாயிற்றுக்கிழமையாதலால், இன்னமும் தூங்கிக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது, , காக்காவைக் காணோம்!

 ஆமாம், முதல்நாள் மாலை, செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்திச் சொன்னோமே, இருந்தும் செயற்குழுவில் உள்ளவர்களே வரவில்லையே! ச்சே!

 இந்த கூட்டம் முடிந்தவுடன், தலைவர் பதவியை உதறிவிட வேண்டியதுதான்! இவர்களுக்கும் நமக்கும் ஒத்துவராது!

 கைபேசி அழைத்தது!

"நான்தான் சேதுராமன் பேசறேன், என்னை ஞாபகமிருக்கா?"

" ஓ! நல்லா ஞாபகமிருக்கு! ரோடு காண்டிராக்டிலே, கோடிக்கணக்கிலே பணம் சுருட்டினதா பேப்பரிலே வந்துதே, அந்த சேதுராமன்தானே?"

" ஏன்யா! உமக்கு நல்லதே கண்ணிலே படாதா? 'கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தார், சேதுராமன்'னுகூட பேப்பரிலே வந்துதே, அந்த சேதுராமன்!"

"வணக்கம்! சொல்லுங்க!"

" தலைவரே! இந்த முறை, நானே தேர்தல்லே, போட்டியிடப்போறேன்! உங்க ஆதரவு ரொம்பத் தேவை! இன்று நடக்கப்போகிற கூட்டத்திலே, என்னை ஆதரிக்கிறதா முடிவெடுங்க! உங்க சங்கத்துக்கு பெரிய தொகை நன்கொடையா தரேன்! இல்லே, உங்க பேரிலேயே, செக் கொடுக்கிறேன்! எல்லார் வாக்கையும் எனக்கு ஆதரவா நீங்கதான் திரட்டணும்! நானே கூட்டத்திலே வந்து கலந்துக்கிறேன், இன்னும் ஒரு அரைமணி நேரத்திலே அங்கே இருப்பேன்........"

"இருங்க, இருங்க! முதல்லே உங்களை சுற்றிவர கூஜாக்களை, உடனடியா கூட்டத்துக்கு அனுப்பிவைங்க! அப்புறமாகூட்டம் சேர்ந்ததும், நானே போன் பண்ணினதுக்குப் பிறகு நீங்க வந்தால் போதும்! மறக்காம, 'செக்'கை என்பேரிலேயே எழுதுங்க!"

" கட்டாயமா!"

 தலைவருக்கு திடீரென உற்சாகம் பிறந்தது. கைபேசியில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து, உடனடியாக வரச்சொன்னார், வரும்போது பத்து, இருபது பேரையும் அழைத்துவரச் சொன்னார்!

 பதினோருமணிக்கு, பந்தலின்கீழ் பதினைந்துபேர் கூடியிருந்தனர். அவர்களிடம், தலைவர் விசாரித்ததில், பிறிதொரு இடத்தில், ஒரு அரசியல் கட்சி, விழா எடுத்து, வந்திருப்பவர்களுக்கு மதிய உணவு போடுவதாகவும் அறிவித்திருப்பதால், எல்லோரும் அங்கே போயிருப்பார்கள் என்று தெரிந்தது!

 செயற்குழு உறுப்பினர்கள் வந்ததும், தலைவர் அவர்களுடன் கலந்தாலோசித்தார். 

 இறுதியில், ஒரு முடிவெடுத்து, பத்துபேரை அந்த அரசியல் கட்சி விழா நடக்கும் இடத்துக்குச் சென்று அனுப்பி, தொகுதி சங்கம் நடத்தும் கூட்டத்தில், சிக்கன் பிரியானி சாப்பாடும் தேவைப்படுவோருக்கு ரகசியமாக குடிப்பதற்கு சரக்கும் வழங்கப்படும் என செய்தி பரப்பப்பட்டது!

 அங்கிருந்த அத்தனை கூட்டமும், இங்கு ஓடிவந்து பந்தலை நிரப்பியது!

 சேதுராமனும் அவர் கூஜாக்களும் வந்துசேர்ந்தனர்.

அவர்களிடம், சிக்கன் பிரியானி பொட்டலத்துக்கும், சரக்கும் ஏற்பாடு செய்யச் சொன்னார், தலைவர்!

 கூட்டம் பன்னிரண்டு மணிக்கு துவங்கியது!

 தலைவர் எல்லோரையும் வரவேற்று தலைமையுரை ஆற்றிவிட்டு, முதலாவதாக சேதுராமனை பேச அழைத்தார்.

 " உங்களுக்கெல்லாம் தெரியும், நான் இந்தப் பகுதியில் மூன்று தலைமுறையாக வாழ்ந்துவருகிற குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதும், கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்தேன் என்பதும் உங்களுக்கு நினைவிருக்கும்.

 இந்தப் பகுதியில், குடிநீர் பற்றாக்குறை மக்களை வாட்டுகிறது. அதை தீர்த்துவைக்க, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு போர்வெல், அதுதான் ஆழ்கிணறு, தோண்டியெடுப்பதற்கான செலவு முப்பதாயிரம் ரூபாயை வருகிற தேர்தல் முடிவதற்குள் ஒவ்வொரு வீட்டு சொந்தக்கார்ருக்கும் தருவதென முடிவெடுத்துள்ளேன். 

 அடுத்ததாக, பள்ளமும், குழியுமாக உள்ள சாலைகள உடனடியாக சீர்படுத்துவதெனவும் தீர்மானித்திருக்கிறேன்.

 (இதை அறிவித்ததும், அவருடைய கூஜாக்கள் சொல்லிவைத்தபடி, 'சேதுராமன் வாழ்க!, தேர்தலில் உங்களுக்கே எங்கள் ஆதரவு' எனவும் கோஷம் எழுப்பினர்.)

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.