சேதுராமன் எல்லோருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு, அமர்ந்தார்.
கூட்டத்திலிருந்து ஒருவர் மேடையேறி மைக்கை பிடித்தார்.
" நடக்கப்போகிற தேர்தல், பஞ்சாயத்து தேர்தலோ, நகராட்சிமன்ற தேர்தலோ, சட்டமன்ற தேர்தலோ அல்ல; பாராளுமன்றத் தேர்தல்! இந்த நாட்டை உலக நாடுகளிலே சிறந்ததாக உருவாக்குகிற பொறுப்பை ஏற்று நடத்தக்கூடிய சக்தி படைத்த தேசீய அரசியல் கட்சிகளைச் சார்ந்த வேட்பாளரை நாம் வெற்றி பெறச்செய்தாக வேண்டும். ஆகவே, சேதுராமன், அடுத்துவரப்போகிற சட்டசபை தேர்தலிலோ, நகரமன்ற தேர்தலிலோ, போட்டியிட்டால் நாம் கட்டாயம் ஆதரித்து அவரை வெற்றி பெறச் செய்வோம்! இந்த தேர்தலில், சுயேச்சைகளை ஆதரித்து நம் வாக்குகளை வீண் செய்யக்கூடாது!"
உடனே சேதுராமனின் கையாட்கள் கூச்சலும் குழப்பமும் விளைவித்தனர்.
தலைவர் உடனே சேதுராமனுடன் ரகசியமாகப் பேசிவிட்டு, அறிவித்தார்.
" நண்பர் சொன்ன கருத்தை ஏற்கிறோம். ஆனால், அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை சாதி அடிப்படையிலும், கட்சித் தலைவர் குடும்பத்துக்கு நெருக்கத்தை வைத்தும், பெரும் தொழிலதிபராக இருந்தால் மட்டுமே நிற்கவைப்பார்கள். தொகுதிக்கு நல்லது செய்கிற சேதுராமன் போன்றவர்களை நிற்கவைக்கமாட்டார்கள்.
ஆகவே, சேதுராமன் வெற்றி பெற்றதும், எந்த அரசியல் கட்சி ஆளுங்கட்சியாகிறதோ, அந்தக் கட்சியில் இணைய சம்மதிக்கிறார்."
இதைக் கேட்டதும், பந்தலே கைதட்டலில் அதிர்ந்தது!
இடையே, சரக்கு உள்ளே சென்று தனது வேலையை துவக்கியதில் நிலையிழந்த சில பேர் ஆளாளுக்கு ஏதேதோ உளறத் துவங்கினர்.
'சிக்கன் பிரியானி', 'சிக்கன் பிரியானி' என்று கூக்குரலும் எழுந்தது.
வேறுவழியின்றி, கூட்டத்தை நிறுத்திவைத்து, பிரியானி வினியோகம் நடந்தது. சரக்கு அடித்தவர்கள் வாந்தி எடுத்து களேபரமாகியது!
குழப்பத்தில், பொட்டலத்தை ஒன்றுக்கு இரண்டாக வாங்கிக்கொண்டு, மக்கள் நடையைக் கட்டினர்!
சேதுராமனும் தன் ஆட்களுடன் வெளியேறினார்.
அப்போது, சேதுராமனிடம், தலைவர், காதருகே "செக்கை என்பேரிலேயே எழுதிடுங்க" என்றார்!
கூட்டம் இனிதே முடிந்தது!