(Reading time: 8 - 16 minutes)

சிறுகதை - என்ன செய்வது? - ரவை

futurequestions

வாழ்க்கையில் பல நேரங்களில், என்ன செய்வது என புரியாமல் திகைக்கிற சந்தர்ப்பங்கள் வந்துபோகும்.

 அந்த நேரங்களில், இப்படி செய்வதா, அப்படி செய்வதா என்பது மட்டுமின்றி மூன்றாவதாக, ஒன்றும் செய்யாமல் இருந்துவிடலாமா எனும் கேள்வியும் எழும்!

 அப்படி ஒரு இக்கட்டில்தான் இன்று சிக்கியிருக்கிறான், சீனு என்கிற சீனிவாசன்!

 தந்தை திடீரென மாரடைப்பில் இறந்தபின், மூத்த மகனாக, மாதவருமானமுள்ள ஒரே ஜீவனாக, குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு எப்படியோ சமாளித்தும் வருகிறான்.

 குடும்பம் என்றால், அவன் தாய் தவிர, அவனுடைய தம்பி, தங்கைகள் ஐவரை சேர்த்து மொத்தம் ஏழுபேர் சீனுவின் மாத சம்பளத்தில் பசியாறவேண்டும்.

 சீனுவுக்கு பெரிய கம்பெனியில் நல்ல சம்பளம்தான்! தவிர, வைப்பு நிதி, தொழிலாளர் கூட்டுறவுசங்க கடன்வசதியும் உண்டு.

 இந்த நாட்டில் பல ஆண்டுகளாக ஒரு அநீதி கோலோச்சுகிறது!

 ஆம், சம்பளம் என்பது ஒருவனுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு ஏற்ப இருந்தால்தானே அவன் வாழமுடியும், வாழ்ந்தால்தானே வேலை செய்யமுடியும்? 

 அப்படி இல்லாமல், வேலைக்கேற்ற ஊதியம் என்பதே சட்டமாகிவிட்டது. போராடிப் போராடி, பிறகு வாழக்கூடிய ஊதியம் என்று மாறியது. ஆனால், வேலை செய்பவன் மட்டுமே வாழவேண்டியவனாக கணக்கில் எடுத்துக்கொண்டு சம்பளம் நிச்சயிக்கப்படுகிறது.

 அவன் மட்டும் வாழ்ந்தால் போதுமா? அவன் குடும்பம் வாழவேண்டாமா? அதிலும், வயதான தாயும் வயதுக்கு வராத தம்பி, தங்கைகளும் வாழவைப்பது அவன் கடமை இல்லையா? அதற்கு யார் பணம் தருவார்கள்?

 தந்தார்கள், சிலர்! ஆனால் கந்து வட்டிக்கார்ர்கள்! விளைவு? ஆறே மாதங்களில், கஜானா காலி! நடுத்தெருவில் சீனுவும் அவன் குடும்பமும்!

 இப்போது அவனை உடனடியாக காப்பாற்றக்கூடிய ஒரே வழி, வைப்பு நிதியிலுள்ள சேமிப்பு! அதைப் பெற வேண்டுமானால், வேலையை ராஜினாமா செய்தாகவேண்டும். 

 கெட்டதிலும் ஒரு நல்லது என்பதுபோல், அவன் செய்த தனியார் கம்பெனி, அரசு வைப்புநிதி அமைப்பில் சேராமல், தனியாக இயங்கி வருகிறார்கள். கூடுதலாக வட்டி தருவதால், அரசும் இதுவரை தடை செய்யவில்லை!

 சீனு, தற்போதைய நெருக்கடியை சமாளிக்க, வேலையை ராஜினாமா செய்து வைப்புநிதியில் சேர்ந்திருக்கிற சேமிப்பை பெற்று குடும்பத்தை பசியிலிருந்து காப்பாற்றியாகவேண்டும்.

 சரி, அந்தப் பணம் ஓரிரு மாதங்களுக்கு மேல் போதாதே! பிறகு?

 வேலையும் இழந்து, வேறு வேலையும் கிடைக்காவிடில், அந்தக் குடும்பத்தின் கதி?

 சீனுவுக்கு உடனடியாக வேறு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டா?

 பி.ஈ., எம்.சி.ஏ.படித்தவர்களே வேலை கிடைக்காமல் திண்டாடும்போது, வெற்று பி.ஏ. பாஸ் பண்ணின சீனுவுக்கு வேறு வேலை விரைவில் கிடைக்க வாய்ப்பேயில்லை.

 உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்கிறேன், தற்போதைய வேலை கிடைத்ததே, அவன் திறமைக்காகவோ, படிப்புக்காகவோ அல்ல; தந்தையின் மகன் என்பதற்காகவே! 

 புரியவில்லையா? சீனுவின் தந்தை அந்த கம்பெனியில்தான் வேலை செய்துவந்தார். அவருக்கு இருதயநோய் வந்தவுடனேயே, கம்பெனி முதலாளியே அவரை அழைத்து, " நீ உயிரோடிருப்பது, உன் குடும்பத்துக்கு மிகவும் அவசியம். அதுவும், உன் மூத்த மகனைத் தவிர, மற்ற குழந்தைகள் எல்லாம் சின்னஞ்சிறுசுகள், அவர்களை கரையேற்றுகிற வரையிலாவது, நீ உயிர் வாழணும். அதனாலே, உன் மூத்த மகனை உடனடியாக வேலையில் சேர்த்துக் கொள்கிறோம். உனக்கு கிடைக்கும் வைப்புநிதி சேமிப்பை வங்கியில் டெபாசிட் போட்டு வருகிற வட்டியிலும், உன் மகனின் சம்பளத்திலும், உன்னால் நிம்மதியாக குடும்பத்தை காப்பாற்றமுடியும். சரியா?" என்று யோசனை கூறியதை ஒப்புக்கொண்டதனால், சீனுவுக்கு கிடைத்தது, இந்த வேலை!

 ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வத்துக்கு வேலையில்லாமல் போய்விடுமே!

 சீனுவின் தந்தைக்கு நோய் முற்றி, மருத்துவ மனையில் சேர்த்து, மாதக்கணக்கில் சிகிச்சை செய்தபிறகும் குணமாகாமல், கடைசியாக சேமிப்புப் பணம் முற்றிலும் கரைந்தபிறகு, மாரடைப்பில் காலமானார்!

 இந்தச் சூழ்நிலையில், சீனுவின் மாதசம்பளம் குடும்பச் செலவுக்கு போதாமல், வட்டிக்கு கடன் வாங்கி, வட்டிக்கு வட்டி குட்டி போட்டு, இன்று வேலையை ராஜினாமா செய்வதைத் தவிர, வேறுவழியில்லை என்ற கட்டாயத்தில் நிற்கிறான்.

 கடவுள்விட்ட வழி, என்று இறைவன்மீது பாரத்தை போட்டு, சீனு ராஜினாமா கடிதம் எழுதிக்கொண்டிருந்தான்.

 அப்போது, அவனை முதலாளி அவசரமாக அழைத்தார்.

 " சீனு! எப்படியிருக்கே? அம்மா, தம்பி, தங்கைகள் எல்லாரும் சௌக்கியமா?"

 சீனுவினால் பொங்கிவந்த கண்ணீரை கட்டுப்படுத்தமுடியாமல், அழுதுகொண்டே, பாதி எழுதிய தன் ராஜினாமா கடித்த்தை அவரிடம் நீட்டினான்.

 முதலாளி, பதறிப்போய், விவரங்களை கேட்டதும், சீனு நிலைமையை விளக்கினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.