எங்கம்மாவை தங்கள் தாயாகவே மதித்து மனதாரப் பாராட்டினர். என் அப்பாவின் மனைவியைப் போலத்தானே ஒவ்வொரு மனைவியும்!
மேலைநாட்டில், இந்த சத்தியத்தை அனுபவிக்காமல், வாழ்வில் நிரந்தர மனைவி எனும் உறவேயில்லாமல் 'கூடிவாழ்தல்' முறையில் சில ஆண்டுகள் இருந்துவிட்டு பிரிந்துவிடுகிறார்கள்.
வயோதிகத்தில்தான் மனைவியின் அருமையை உணர்ந்து, இப்போதெல்லாம் அங்கேயும் நமது குடும்ப வாழ்க்கைமுறையை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.........."
அவரை அனுமதித்திருந்தால், இன்னும் மணிக்கணக்கில் மனைவியின் பெருமையை சொல்லிக்கொண்டே இருந்திருப்பாரோ, என்னவோ! நான்தான், அவரை குறுக்கிட்டு நிறுத்தி, ஆபீஸ்க்கு அனுப்பிவைத்தேன்!
நீங்களே சொல்லுங்கள்! இப்படிப்பட்ட தூய்மையான உள்ளத்தின் சொந்தக்காரன், அன்பின் ஊற்று, தனது மனைவிக்கு 'மனைவிகள் தின'த்தன்று பரிசளிக்காமல் இருப்பாரா?
ஆமாம், அந்தப் பரிசு என்னவாக இருக்கும்?
நகையா, ஜவுளியா, அலங்காரப் பொருளா, ............?
என்னையும் உடன் அழைத்துப்போய் வாங்கப்போகிறாரா, அல்லது ஏற்கெனவே வாங்கிவைத்திருக்கிறாரா?
திடீரென ஒரு சந்தேகம் வந்தது, காலையில் பேசியபோது, வெளியில் போவதையும், ஓட்டலில் சாப்பிடுவதையும் சொன்னவர், பரிசு வாங்குவதுபற்றி சொல்லவே இல்லையே!
ஓ! சர்ப்பிரைஸாக பரிசளிப்பதில்தானே த்ரில் இருக்கும்! அதனால்தான் அவர் அதைப்பற்றி கூறவில்லை!
நேரம் ஓடிக்கொண்டிருந்தது! கடிகாரத்தைப் பார்த்தேன்! மாலை மணி ஐந்து!
ஓ! அவர் வருகிற நேரமாகிவிட்டதே! நான் இன்னமும் ரெடியாகவில்லையே!
அவசரமாக, புத்தாடையணிந்து அலங்காரம் செய்துகொண்டு, நகையணிந்து, அவர் வீட்டுக்கு வந்தவுடன் சாப்பிடுவதற்கு டிபன் தயாரித்துவிட்டு வாசற்கதவைத் திறந்துவைத்து காத்திருந்தேன்.
நேரமாகிக் கொண்டிருந்தது, எனக்கு பரபரப்பை அடக்கிக்கொள்ள இயலவில்லை, அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டேன். தொடர்பு கிடைக்கவில்லை, வேறுயாருடனோ பேசிக்கொண்டிருக்கிறார்.......
அடுத்தடுத்து மூன்றுமுறை முயற்சி செய்தும் பலனில்லை!
கடிகாரத்தைப் பார்த்தேன். மணி ஏழு!