சிறுகதை - குருவிக்கூடு - ப்ரீதா
அதிகாலை 5.30 மணி. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்த ஹேமா டி.வியில் ஒலித்த வினாயகர் துதி கேட்டதும் மெல்ல கண் விழித்தாள். சமையலறையில் எடுப்பதும் வைப்பதும் போல சத்தம் கேட்டது. தன் மாமியார் ரமணியம்மாள் அவர் வேலையைத் தொடங்கிவிட்டது தெரிந்ததும் படுக்கையை விட்டு எழ முயன்றாள். ஆனால் பாழாய்ப் போன தூக்கம் அவளை விட மறுத்தது. இரவு 1.00 மணி வரை டெரக்கோட்டா நகைகள் செய்து விட்டு வந்து லேட்டாக படுத்ததுதான் இதற்கு காரணம்.
ஹேமாவின் மாமியாருக்கு அடுத்த வீட்டு வாசலில் தண்ணீர் தெளிக்கும் சத்தம் கேட்டால் தூக்கம் வராது. உடனே எழுந்து விடுவார். வாசல் தெளிக்கும் போது அந்த வீட்டிலிருக்கும் தரித்திரம் தெளிக்காத வாசலில் உட்கார்ந்து கொள்ளும் என்று கூறுவார். என்ன சொன்னாலும் தன்னால் 5.00 மணிக்கெல்லாம் எழுந்து தெளிக்க முடியாது. 6.00 மணிக்கு தான் முடியும் என்று திட்டவட்டமாகக் கூறி விட்டாள் ஹேமா.
கம்பெனியிலிருந்து 9.30 அல்லது 10.00 மணிக்கு தான் வீட்டுக்கு வருவான் அவளது கணவன் சுகுமார். அவன் சாப்பிட்டதும் எல்லாம் எடுத்து வைத்து, பாத்திரம் துலக்கி இருவரும் கதை பேசிவிட்டு தூங்கச் செல்கையில் மணி 12.00 ஆகி இருக்கும். சில சமயம் ஆர்டருக்கு ஏற்றாற் போல டெரக்கோட்டா நகைகள் செய்வாள். எழுந்திரிக்காமல் முழு கவனமுடன் களி மண்ணில் செய்ய வேண்டும் என்பதால் இரவில் தான் செய்வாள். பகலில் மண்ணில் கை வைத்தால் போதும் ஏதாவது வேலை வந்து விடும். பாதியில் விட்டுச் சென்றால் டிசைன் சரியாக வராமல் போய்விடும். அதனால் இரவில் செய்வது தான் அவளுக்கு வசதியாகப்பட்டது. அவளது மாமியார் 8.00 மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு, தன் பேரன் பேத்திக்கும் ஊட்டிவிட்டு 9.00 மணிக்கு அவர்களையும் அழைத்துக் கொண்டு போய் படுத்துக்கொள்வார். தன் மாமியாரின் மாமியார் வேலாத்தாள் பாட்டிக்கு டிபன் தந்து விட்டு அவரிடம் கதை பேசிக்கொண்டிருப்பாள் ஹேமா. 83 வயதான அவருக்கு பழைய கதைகளை திரும்பத் திரும்ப சொன்னாலும் சலிக்காது. அதே போல் ஏதாவது வேலையை இழுத்துப் போட்டு கொண்டு செய்வார்.
பாட்டிக்கும் அவர் கணவர் ரங்கசாமிக்கும் சுகுமார் என்றால் உயிர். அவனுக்கும் அப்படித்தான். தாத்தா காலமானதும் ஊரிலிருந்த பாட்டியை தன்னுடன் இருக்கும்படி அழைத்து வந்து விட்டான். தனக்கும் மாமியாருக்கும் சண்டை வந்தாலும் அவருடன் பேசாமல் இருக்க முடியாது ஹேமாவிற்கு. அவருக்கு ஒவ்வொரு பௌர்ணமி, சஷ்டி, ஆடி வெள்ளி, புரட்டாசி என்று அனைத்து நோன்புகளுக்கும் வாசலை சாணம் போட்டு மொழுக