(Reading time: 11 - 21 minutes)
Couple

கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாங்க. அம்மா கஷ்டத்தை பார்த்து பார்த்து வளர்ந்த எனக்கு உங்கம்மா கஷ்டமும் புரியும். நம்ம குழந்தைங்க பெரியவங்க அரவணைப்போட வளர்றதுதான் எனக்கும் வேணும். அதனால நீங்க கவலையேபடவேண்டாம். நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். சரியா?” என்றாள். அதை இன்றும் கடைபிடிக்கிறாள். இருந்தாலும் அவ்வப்போது வரும் வாக்குவாதங்களைத் தவிர்க்க முடியவில்லை.

       அன்று ஒரு நாள் சின்ன மாமியார் வீட்டு விசேஷம். அவரின் பேரக் குழந்தைகளுக்கு காதுகுத்து. என்ன சீர் செய்வது என்று ஹேமாவும், சுகுமாரும் ரமணியம்மாளிடம் கேட்டனர். அவர், “ஒரு சின்னக் கம்மல் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார். மேலும், சுகுமார், ஹேமா திருமணத்திற்கு மொய் வந்த ஒரு பவுன் தங்கக்காசு தன்னிடம் இருப்பதாகவும் அதை தான் சீர் செய்துவிடுவதாகவும் கூறினார். அத்துடன் இல்லாமல் அதைக் கொண்டு வந்து அவளிடம் தந்து பத்திரமாக வைத்திருந்து விசேஷ வீட்டில் தருமாறு கூறினார். சரி என்று கூறி வாங்கி வைத்துக் கொண்டாள் ஹேமா.

விசேஷ நாள் வந்தது. கோவில் மண்டபத்தில் உறவினர் அனைவரும் அமர்ந்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தனர். காது குத்தி முடித்தவுடன் குழந்தைகளை ஆசீர்வாதம் செய்ய சென்றனர். ஆசீர்வதித்து தாங்கள் கொண்டு வந்த கம்மலை குழந்தைகளின் தாயிடம் தந்து விட்டு, தன் மாமியாரிடம் அந்த ஒரு பவுன் காசை தந்தாள் ஹேமா. வாங்கிக் கொண்டவர் சற்று தள்ளியிருந்த தன் மூத்த மகனை அழைத்தார். அவர் கையில் அந்த பவுனைத் தந்து மொய் வைக்கச் சொல்லிவிட்டார். இதைக் கண்ட ஹேமாவுக்கு கோபம் வந்தது. ஏற்கனவே, சுகுமாரும், அவன் அண்ணனும் மனஸ்தாபத்தில் பேசிக் கொள்ளாமல் இருந்தனர். இவர் மட்டும் தன் மகன் வீட்டிற்கு போய் பார்த்து வருவார். வீட்டிற்கு வந்ததும் இதைக் கேட்டே ஆக வேண்டும் எனத் தீர்மானித்து அவரைக் கூப்பிட்டாள்.

“அத்தை, கோவில்ல பவுனை நீங்க வைக்கறதுக்கு பதிலா ஏன் அவர் கைல தந்து வைக்கச் சொன்னீங்க?”

“ஏன், அதனால என்ன? நான் வைக்கறதுக்கு பதிலா அவன் வைச்சான்”

“அதைத்தான் கேட்கறேன், எங்க கல்யாணத்துக்கு மொய்யா வந்த காசை அவங்க கைல தந்து வைக்க சொல்லி இருக்கீங்க. அதுவும் எங்கிட்டயே குடுத்து வெச்சிருந்து, நான் பக்கத்துல தான இருந்தேன். எங்ககிட்ட கூட குடுத்து வைக்கச் சொல்லி இருக்கலாம்,. எங்களை மட்டும் ஏன் தனியா கம்மல் வாங்கச் சொன்னீங்க?”

“அட, அவன் ஏதாவது வாங்கிட்டு வந்தானா, இல்லையானு தெரியலை. அதான் குடுத்தேன். விடுவியா” என்று சாதாரணமாகக் கூறினார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.