வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை வீட்டை பெருக்க வேண்டும். இதெல்லாம் ஹேமா செய்ய முன் வராததால் திட்டிக்கொண்டே இருப்பார். ஆரம்பத்தில் கோபித்துக் கொண்டவளுக்கு பின் அவர் பேசுவது பழகிப் போய்விட கண்டுகொள்ளாமல் விட்டு விட்டாள்.
ஆனால் மற்றபடி ஹேமாவிற்கு அவர் மிக உதவியாக இருந்தார். பேரக் குழந்தைகளை நன்கு பார்த்துக் கொண்டார். கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்து பழக்கப்பட்டவளுக்கு பெரியவர்களுடன் ஒத்துப் போவது ஒன்றும் கஷ்டமாகத் தெரியவில்லை. மேலும் அவள் கணவன் சொன்னதையும் அவள் மறந்துவிடவில்லை. ஒரு நாள் இரவு உணவுக்குப் பின் கணவன், மனைவி இருவரும் வாசலில் அமர்ந்து இயற்கைக் காற்றை அனுபவித்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அவரவர் கல்லூரி வாழ்க்கை, நண்பர்கள் எனப் பேசிக்கொண்டிருக்கையில் அவன் நண்பன் ஒருவனது குடும்பத்தில் மாமியார், மருமகள் சண்டை பெரிதாக ஆனதையும், அவன் தன் மனைவியையும் விட முடியாமல், தாயையும் விட முடியாமல் தன் நண்பன் தவிப்பதையும் கூறி வருந்தினான் சுகுமார். மேலும் ஹேமாவிடம்,
“நான் ஒண்ணு சொன்னா கேட்பியா?”
“என்ன சொல்லுங்க”
“நமக்கு நம்ம இரண்டு குழந்தைங்க எப்படியோ, அப்படித்தான் இந்த 2 பெரியவங்களும். அப்பா இறந்தவுடன் எங்கம்மா எங்களை கஷ்டப்பட்டுத்தான் படிக்க வெச்சாங்க. எல்லாம் உனக்கே தெரியும். எந்த சூழ்நிலை வந்தாலும் நாம இவங்க இரண்டு பேரையும் கைவிடக்கூடாது. உன்னைப் பற்றி எனக்குத் தெரியும். நீ நல்லா பார்த்துக்கறே. அட்ஜஸ்ட் பண்ணிக்கறே. இருந்தாலும் சொல்றேன்” என்றான்.
தன் நண்பனின் நிலை அவனை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை நன்கு உணர்ந்து கொண்டாள். அவன் கையை ஆறுதலாகப் பிடித்தபடி “நீங்க கவலையேபடாதீங்க. எங்களுக்குள்ள எந்தப் பிரச்சனையும் இல்லை. வேலை செய்யுறதுல குறை சொல்லறதுன்னு சின்ன சின்ன சண்டைகள் வரும். ஆனா எதுவும் தப்பா நடக்காது. சண்டையில்லாத வீடு எங்க இருக்கு? தனக்கு சாதகமா பேசலையேன்னு அம்மாவுக்கும், தன்னைவிட்டுக் கொடுத்து பேசிட்டார்னு பொண்டாட்டிக்கும் ஈகோ வந்து தான் சண்டையே பெருசாகுது. எங்க பொம்பளைங்க சண்டைக்குள்ள நீங்க வராதீங்க. நாங்க காலைல சண்டை போட்டால் சாயந்திரம் சேர்ந்துக்குவோம்.”
மேலும், “எங்கம்மாவும் அத்தை மாதிரி தானே. எங்கப்பா எங்களை விட்டு போனப்ப