அதனாலேதான், திடீர்னு நீங்க இந்தமாதிரி, இத்தனை நாட்கள் எழுதிவந்ததற்கு நேர்மாறாக, லேடஸ்ட் கதை எழுதியதும், எங்களாலே நம்பவே முடியலே, ஏற்றுக்கொள்ளவும் முடியலே, .........ஜெபமலர்! நான் சொல்வது சரிதானே?"
" சரிதான்! நான் இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே சொல்றேன், அங்கிள்! இதுவரையிலே கதைகள், கவிதைகளிலே, அநீதியை எதிர்த்து, கண்டித்து, ஓங்கிக் குரல் கொடுப்பீங்க! "கொடுவாளினை எடுடா, கொடியோன்செயல் அறவே" ன்னு பாரதிதாசன் பாணியிலே வீராவேசமா எழுதிவந்த நீங்க திடீர்னு போதிமரத்து புத்தர்போல, 'அமைதி, சாந்தம், பொறுமை'ன்னு எழுதினால், நம்ப முடியலே, அங்கிள்!"
" அங்கிள்! நான் ராமகிருஷ்ணன் பேசறேன், உங்களைப்போல பெரியவங்க, எழுத்துவன்மை உடையவங்க, எங்களைப்போல இளைய சமுதாயத்தைச் சேர்ந்தவங்களுக்கு, நல்ல வழியைக் காட்டணும், நல்ல வழியைக் காட்டாவிட்டாலும் பரவாயில்லே, 'சும்மா இருப்பதே சுகம்'னு எழுதி, அடிமைத்தனத்தை வளர்த்துவிடக்கூடாது, இல்லையா? அபி, ஹரிக்கும் நீங்க லேடஸ்ட்டா எழுதியிருக்கிற கதையின் செய்தியுடன் உடன்பாடில்லை, இல்லையா அபி?"
" ஆமாம், அங்கிள்! நாட்டிலே நல்லவங்களையோ, நல்லதையோ சந்திப்பதே அபூர்வமாயிருக்கிற நேரத்திலே, எதுவரினும் ஏற்றுக்கொள்னு நீங்க சொல்கிறபடி நடந்துகொண்டால், தொடர்ந்து சிறுவர், சிறுமிகள், கன்னிப்பெண்கள் காமுகர்களால் சீரழிக்கப்பட்டுக்கொண்டே அழிவார்கள், அதிகாரிகளும் அமைச்சர்களும் கோடிக்கணக்கில் கொள்ளையடித்துக்கொண்டேபோவார்கள், கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் பள்ளிக்கூட வாசலிலேயே மாணவர்களுக்கு விற்கப்படும், நீதிமன்றங்களிலேயே நீதி குழிதோண்டிப் புதைக்கப்படும், இதையா நீங்கள் விரும்புகிறீர்கள், அங்கிள்?"
" நான்தான் ஹரி! ஒருவேளை, நீங்க சொல்லவந்த செய்தியை அவசரத்திலே குழப்பி தவறா எழுதியிருப்பீங்களோன்னு, சந்தேகம்..........."
" முதல்லே உங்க அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி! என்மீது உங்கள் அனைவருக்கும் இத்தனை பிரியமான்னு அதிசயமாயிருக்கு! என் எழுத்தின்மீது இத்தனை நம்பிக்கையான்னு பிரமிப்பாயிருக்கு, இறைவா! உன் கருணையே கருணை!"
" அங்கிள்! அந்த இறைவனே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட தசாவதாரம் எடுத்ததாக நம்புகிற நாட்டிலே பிறந்தவங்க, நாம்! நீங்க சொல்றதை கேட்டால், அதர்மத்தை எதிர்த்து போராடாமல், அதை ஏற்றுக்கொள்வதுபோல இருக்கே, அதை விளக்கமுடியுமா?"