" உதாரணமா....?"
" நீங்கள் மூச்சு உள்வாங்கி வெளியே விடுவதால் வாழ்கிறீர்களே, அந்த சுவாசம் நீங்கள் சொல்லியா நடக்கிறது? நீங்கள் தூங்கும்போதும், மயங்கி விழுந்தாலும், அது இயங்குகிறதா இல்லையா? உங்கள் அறிவா அதை இயக்குகிறது? நீங்கள் வாயில் மெல்லுகிற உணவு வயிற்றில் ஜீரணமாகி இரத்தமாகி அந்த ரத்த ஓட்டம் இருதயத்தை இயக்குகிறதே, உங்கள் அறிவினாலா? அப்படியானால், உங்கள் அறிவினால் ஏன் அந்த இருதயம் செயற்படாமல் மரணம் ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை?"
" என்னென்னவோ சொல்லி குழப்புகிறீர்கள், அங்கிள்!"
" நான் சொல்வதையே உங்களால் புரிந்துகொள்ள முடியாமல் குழப்பம் அடைகிறீர்களே, அந்த மாபெரும் சக்தி, எதை, ஏன், எப்போது, எப்படி, செய்கிறது என்பதையா புரிந்து கொள்ளமுடியும்? அதனால், கவிஞர் கண்ணதாசன் பாடியதை ஞாபகத்தில் கொள்ளுங்கள், 'நமக்கும் மேலே ஒருவனடா, அவன் நாலும் தெரிந்த தலைவனடா!' என்பதை மறக்காதீர்கள்.
இறுதியாக ஒன்றை சொல்கிறேன்:
ஒவ்வொரு வினாடியும் நம் அனைவரையும் இயக்குபவன் அவன், உங்களை இன்று இங்கு இப்போது வரவழைத்ததும் அவன், நம்மை ஆயுட்காலம் முழுவதும் இயக்குபவன் அவன்! உங்களுக்குள்ளே வாழ்கிற குரல் அவனுடையது! அதன்படி செயல்படுங்கள்! 'கடமையை செய், பலனை துறந்துவிடு' என்பதின் பொருள், ஆக்கம் மனிதனுடையது, நோக்கமும் விளைவும் அவனுடையது!"
என்ன தோன்றியதோ, வந்திருந்தவர்கள் அனைவருமே, அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தபோது இருந்த மனநிலையிலிருந்து வெகுதூரம் விலகிவந்திருந்தார்கள்!