ஒரே ஒரு கதையில் எழுதியிருப்பதனால், உலகமே பாதிக்கப்படுவதுபோல, ஆவேசமாக என்னிடம் ஓடி வந்திருக்கிறீர்களே, இதற்கு அறிவுபூர்வமாக ஒரு காரணம், ஒரே ஒரு காரணம் சொல்லமுடியுமா?"
கூடியிருந்தோர் முகத்தில் அசடு வழிந்தது!
" சரி, அதையும் விடுங்கள், இதற்குமுன் நான் எழுதிய 125 கதைகளை படித்து எத்தனைபேர் கையில் வாளினை எடுத்து கொடுமையை அழித்திருக்கிறார்கள்? ஏன் செய்யவில்லை? மற்றவர்களை விடுங்கள், உங்களில் எவராவது, சிறு துரும்பையாவது எடுத்துப் போட்டிருக்கிறீர்களா? ஏன் செய்யவில்லை? உங்களை விடுங்கள், நானே செய்யவில்லையே, ஏன்? அண்ணல் காந்தியடிகளுக்கு தென் ஆப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகுதானே, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மாவானார்?"
" உண்மைதான், அங்கிள்!"
" ஆண்டவனே தசாவதாரம் எடுத்தான், தர்மத்தை நிலைநாட்ட என நம்புகிறீர்களே, அந்த தர்மம் நிலைத்து நிற்காமல், மீண்டும் மீண்டும் ஏன் அவதாரம் செய்யும்படி ஆகியது?"
" அது வந்து, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்னு சொல்லியிருக்காங்க, நம்ம பெரியவங்க........."
" அப்படியா? அதற்கென்ன பொருள்? தர்மத்தையும் சூதினையும் படைத்த அதே சக்தி, ஒரு சமயத்தில் சூதினையும் பிறிதொரு நேரத்தில் தர்மத்தையும் வெல்ல வைக்கிறான், என்பதுதானே?"
" அங்கிள்! சுற்றி வளைத்துப் பேசாமல், நேரடியாகச் சொல்லுங்கள், நீதிக்காகவும் தர்மத்துக்காகவும் நாம் போராட வேண்டுமா, வேண்டாமா?"
" நீதி, அநீதி, என்பதும், தர்மம், அதர்மம் என்பதும் ரிலேடிவ் டேம்ஸ்! பார்வையை பொறுத்து மாறக்கூடியவை! அப்சல்யூட் ட்ரூத் என்று சொல்லக்கூடியது, நம்மால் புரிந்துகொள்ள முடியாத, அனுமானிக்க மட்டுமே முடிந்த அந்த மாபெரும் சக்தி மட்டுமே! அதுவே ஒன்றாகவும் பலதாகவும் நம் பார்வையைப் பொறுத்து தெரிகிறது, ....."
" அங்கிள்! இதெல்லாம் நம்பும்படியாகவா உள்ளது?"
" உனது நம்பிக்கைக்கு ஆதாரம் உன் அறிவு. அறிவு சொன்னால் நம்புவீர்கள், இல்லையேல் நம்பமாட்டீர்கள், சரியா?"
" உண்மை"
" அந்த அறிவினால் விளக்கமுடியாத நிகழ்ச்சிகள் நடக்கின்றனவே, அவை பொய்யா?"