சிறுகதை - நல்லதே நினைப்போம்! - ரவை
அந்தக் குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து கல்லாய் அமர்ந்திருந்தது!
அதுவும் குடும்பத் தலைவர் சத்தியமூர்த்தி ஊரில் இல்லாதபோது, அந்தச் செய்தி கேட்டது, மேலும் கவலையை அதிகரித்தது.
குடும்பத்தலைவர் ஊர் திரும்பியதும், அவருக்கு விஷயம் தெரிந்ததும், என்ன சொல்வாரோ, ஏது செய்வாரோ, எப்படி ஏற்பாரோ, என்று திகில் மனதை ஆக்கிரமித்தது!
மேலும், இந்த விஷயத்தை அவருக்கு இப்போதே தெரிவிப்பதா, அல்லது ஊர் திரும்பியதும் தெரிவிக்கலாமா, என குழப்பம்!
அவர் ஒரு இருதய நோயாளி! வெளியூருக்கு வியாபார நிமித்தம் சென்றிருக்கிறார், தனியே. அவர் வியாபாரத்தில் ஒரு முக்கியமான திருப்பத்தை எதிர்நோக்கி அதற்கான ஏற்பாட்டிற்காக சென்றிருக்கிறார்.
அவர் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்காலத்தைப் பற்றிய ஏராளமான கனவுகளோடு ஊர் திரும்பியதும், இந்த விஷயம் தெரிந்தால், அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா? அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல், அவர் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், நண்டும் சிண்டுமாக குழந்தைகள் உள்ள குடும்பத்தின் கதி? வீதிக்கு வரவேண்டியதுதான்!
ஒன்றா, இரண்டா, எண்பது லட்ச ரூபாய்! ஒரு லாபகரமான வியாபாரம் துவங்குவதற்காக, சேமித்த பணம்!
இந்தப் பணம் கையில் இருக்கும் துணிவில்தான் அவர் பெரிய தொழில் ஒன்று துவங்க கூட்டாளியை தேடிச் சென்றிருக்கிறார்.
கிராமத்திலிருந்த நிலபுலன்களை விற்று திரட்டிய பணம்!
கழுகுக்கு மூக்கில் வேர்த்ததுபோல, எங்கிருந்தோ அந்த 'கடன்காரன்', 'நாசமாப் போறவன்' வந்து கெஞ்சி கூத்தாடி, பத்தே நாளில் வட்டியுடன் ஒரு கோடி ரூபாயாக திருப்பித் தருகிறேன் என்று சத்தியம் செய்து சத்தியமூர்த்தியை நம்பவைத்து, இரவோடு இரவாக பணத்துடன் ஊரை விட்டே ஓடிவிட்டான்!
குடும்பத்தில் மூத்த மகன் கல்லூரி மாணவன்! அவனுக்கு அடுத்தவள் மூத்த மகள் பள்ளி இறுதி வகுப்பு மாணவி! கீழ் வாரிசுகள் எல்லாம் விவரமறியா குழந்தைகள்!
குடும்பத் தலைவி கிருத்திகா, கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள்! சூதுவாது அறியாதவள். சத்தியமூர்த்தியின் அக்கா மகள்!
"கிருத்திகா!" என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டு, அதிர்ச்சியில் உறைந்திருந்த குடும்பமே, தலைதூக்கிப் பார்த்தது!
பழனிசாமி! கிருத்திகாவின் மூத்த சகோதரன்.