சிறுகதை - எங்க வீட்டு தீவட்டி! - ரவை
வேத சிரோன்மணி அப்பைய தீட்சிதர் வீட்டில் அவரைச் சுற்றி, அவரிடம் வேதம் பயின்ற சீடர்கள் பயபக்தியுடன் கைகட்டி வாய் பொத்தி சூழ்ந்திருந்தனர்.
அன்று அவருடைய பிறந்த நாள்! சீடர்கள் அவருக்கு பரிசை பணிவுடன் தந்து நமஸ்கரித்துவிட்டு, அவரை சுற்றி நின்றுகொண்டிருந்தனர், அவருடைய ஆசி உரைக்காக!
" பகவான் கிருபையிலே, நீங்கள் எல்லாம், என்னிடம் வந்து ருக் வேதம் கற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எந்த குலம், எந்த சாதி, எந்த இனம், ஆணா பெண்ணா என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் நான் உங்கள் அனைவருக்கும் கற்றுத் தருகிறேன்.
மனதுக்கு ரொம்ப இதமாயிருக்கு. மனப்பூர்வமா உங்கள் எல்லோரையும் ஆசிர்வதிக்கிறேன்!
அதோ, நிற்கிறதே ஒரு தீவட்டி! அவன் என் மகன்தான்! அவனுக்கு பகவானின் அருள் இல்லை, அவனுக்கு சாஸ்திரம், வேதம், மந்திரம், பாபம், புண்ணியம், எதிலுமே நாட்டமில்லை. அவன் எப்படித்தான், எனக்கு மகனாகப் பிறந்தானோ!
சரி, அதை விடுங்க! இந்த நல்ல நாளிலே, நல்லதையே சிந்திப்போம்! வீட்டுக்குப் போய்ட்டு, நாளைக்கு கரெக்டா டயத்துக்கு வேத க்ளாஸுக்கு வந்துடுங்க!"
கலைந்து வீடு திரும்பியவர்களில் ஒருவனுக்கு ஒரு சந்தேகம்!
" கணேசா! வாத்தியார் தன் பையனை தீவட்டினு திட்டினாரே, அந்த சொல்லுக்கு அர்த்தமென்ன?"
" ஒரு நிமிஷம்! கூகுளிலே தேடிப் பார்க்கிறேன்......."
" ஏண்டா லட்சுமணா! வாத்தியாரே சொன்னாரேடா, எதிலுமே நாட்டமில்லாதவன்னு, அதுதான்டா அர்த்தம்....."
" டேய்! கூகுளிலே போட்டிருக்கு, தீவட்டின்னா 'எதுக்குமே பயன்படாதவன்'னு!......"
" பாவம்டா, அந்தப் பையன்! நம்ம அத்தனைபேர் எதிரிலும், வாத்தியார் அவனை அப்படி திட்டியிருக்கக்கூடாது......"
" இதை கவனிச்சியா? வாத்தியார் திட்டினபோது, நான் அந்தப் பையனை பார்த்தேன், சிரிச்சுண்டு நிக்கறான்டா!"
இப்படி இவர்கள் பேசிக்கொண்டே, வீட்டுக்கு திரும்பியபோது, வாத்தியார் வீட்டிலே நடப்பதை பார்ப்போமா?
வாத்தியாரின் பெண்டாட்டி, மகனைப் பார்த்து தலையில் அடித்துக்கொண்டு, அவனிடம் பேசினாள்.
" சிவா! உங்கப்பா அத்தனைபேர் மத்தியிலும் உன்னை அப்படி திட்டினது, எனக்கு அவமானமாயிருக்குடா! பெற்ற வயிறு பற்றி எரியுதுடா! ஏன்டா, இப்படியிருக்கே?"