வாழ்வான், நம்மை சந்தோஷப்படுத்துவான், நம்பிக்கையை விட்டுடாதீங்க!"
அப்போது, அவர்களின் 'ஒத்தப்புள்ளே' சிவா தூக்கமுடியாமல், பை நிறைய கறிகாயுடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
பையை கீழே வைத்துவிட்டு, கைகளை உதறிக்கொண்டான். பத்மா பதறிப்போய், மகனை அணைத்துக்கொண்டு, " ஏன்டா! இப்படி மூளையில்லாம தூக்கமுடியாத அளவு கறிகாய் வாங்குவாங்களா? வீட்டிலே இருப்பது நாம மூணே பேரு! குறைச்சு வாங்கக்கூடாதா?"
" கேளு, நல்லாக் கேளு! ஏன்டா! மூளையை உபயோகிக்கவே மாட்டியா? அல்லது அது இல்லவே இல்லையா?"
" நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க! அவன் ஏற்கெனவே பளு தூக்கமுடியாமல் தூக்கி கைவலியிலே அவஸ்தைப் படறான்......"
அவர் நகர்ந்ததும், சிவா தன் தாயிடம், ரகசியமாக, " அம்மா! பார்க்கவே ரொம்ப பரிதாபமா இருந்ததும்மா, அந்த வயசான கிழவியை! காலையிலிருந்து உட்கார்ந்திருக்காளாம், வியாபாரமே ஆகலையாம், வரவங்கள்ளாம் பெரிய கடைகளிலே கறிகாய் வாங்கிடறாங்களாம், இவளுக்கு போணியே ஆகலையாம்,......."
" சரி, அதுக்காக, உன் கையிலே இருந்த காசையெல்லாம் அவகிட்ட கொடுத்துட்டு, அவ கூடையிலே இருந்ததை உன் பையிலே போட்டுக்கிட்டு தூக்கமுடியாம தூக்கிக்கிட்டு வரியா? சிவா! வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்காதேடா! அவ புள்ளே, வீணாப்போன கறிகாயை அவகிட்ட கொடுத்து, அவ வயசைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டு, உன்னைப்போல அசடுகள் காசு கொடுத்து வாங்கிடுவாங்கன்னு திட்டம் போட்டு, அவளை அனுப்பிடறாங்கடா! நாம ஏமாந்துடக்கூடாதுடா! சிவா! உனக்கு இன்னும் இந்த உலகத்தை புரிஞ்சிக்கவே தெரியலேடா! நீ எப்படிடா உன் வாழ்க்கையை நடத்தப்போறே?"
" அம்மா! நீ சொல்றது உண்மைன்னாக்கூட, அந்தக் கிழவி கைகூப்பி கண்கலங்க என்னைப் பார்த்த அந்தப் பார்வைக்கு விலையே கிடையாதும்மா!"
"ஆனா, அவ விற்ற உருளைக்கிழங்குக்கு விலை உண்டேடா! பையை கவிழ்த்துக் கொட்டு! சொத்தையா, சொள்ளையா இருக்கிறதை, காட்டறேன், பார்! சிவா! இது ஏமாற்றுகிற உலகம்டா! இங்கே பரிதாபத்துக்கு இடம் தருபவன், ஏமாளிடா!"
ஒரு நிமிடம் கூட தயங்காமல், சிவா கறிகாய் பையை கவிழ்த்துக் கொட்டினான்.
அப்பப்பா! அந்த பளபளப்பு! பத்மா ஒவ்வொரு கிழங்காக சோதனை செய்தாள்.
எல்லாம் நன்றாக இருந்தன, ஒன்றுகூட சொத்தையில்லை!
பத்மா அசந்து போனாள், சிவாவை ஏறிட்டுப் பார்த்தாள்!