அப்போது வீட்டிற்குள் அக்கம் பக்கத்து வீட்டிலுள்ளவர்களும் உறவினர்களும் சாரிசாரியாக வந்து, பிரமீளாவை அணைத்துக்கொண்டு அழுதனர்!
பிரமீளாவுக்கு தெரியும், எல்லோருடைய இரங்கலும் வருத்தமும் உள்ளார்ந்தவை அல்ல, மேம்போக்கானதென்று!
அவள் அறிவு சொன்னதை, சிறிது நேரத்தில் அவர்கள் நிரூபித்தனர்.
சம்பிரதாயமான விசாரிப்புகள்:
" எங்களுக்கெல்லாம் இது ஒரு பெரிய அதிர்ச்சி! இந்த சின்ன வயசிலே, உன் புருஷன் செத்துப்போனது, மனசிலே ஏத்துக்க முடியலே, அதுவும் அவனைவிட சின்னவ உன்னையும், இந்த பாப்பாவையும் அனாதையா விட்டுப்போக, அவனுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ?"
" என்னாச்சு? நேத்திக்கு சாயங்காலம்கூட பார்த்து பேசிண்டிருந்தேனே, நல்லாத்தானே இருந்தான்...."
" மாரடைப்பா? இப்பல்லாம் சின்ன வயசுக்காரங்களுக்கும் மாரடைப்பு வருது......"
" பிரமீளா! அவனை பெத்தவங்களுக்கு சொல்லிட்டியா? வருவாங்களா? உங்க அப்பா, அம்மா வருவாங்களா? அவங்க வந்தபிறகுதான், பாடியை எடுக்கப்போறியா?"
" அப்ப, இன்னி முச்சூடும், தெருவிலே யாருமே சாப்பிடமுடியாதா? சின்னப் புள்ளைங்களுக்கு பசி தாங்காதும்மா......."
" காரியங்களுக்கு, கையிலே பணம் வச்சிருக்கியா? பத்துமா? இல்லே, வந்திருக்கிறவங்களை ஆளுக்கு கொஞ்சமா தரச்சொல்லட்டுமா?"
"ஊரிலே ஏதாவது நிலபுலன், வீடுவாசல் இருக்கா? ஏம்மா! பச்சைப்புள்ளையை வச்சிகிட்டு எப்படிம்மா வாழப்போறே?"
இத்தனை கேள்விகளையும் ஆளுக்கு ஒன்றாக கேட்டுவிட்டு அடுத்த நிமிடமே, அங்கிருந்து சத்தமில்லாமல், நகர்ந்துவிட்டார்கள்.
பொழுது போய்க்கொண்டிருந்தது.
பிரமீளாவையும் அவள் பாலகனையும் தனித்து விட்டுவிட்டு தெருமக்கள் தங்கள் ஜோலியை கவனிக்கச் சென்றுவிட்டனர்!
"அம்மா! பசிக்குதும்மா! பால் குடும்மா!"
பிரமீளா சமையல் மேடையை நோட்டம் விட்டாள். நல்லவேளை, அவனுக்கு போதுமான பால் இருந்தது!
பாலை குடித்துக்கொண்டே, பாலகன் கேட்டான், "அம்மா! நீ டீ குடிக்கலியா? பாவம்மா, நீ!