அந்த இடைக்காலத்தில்தான் அவர்களுக்கு அந்த பாலகன் பிறந்தான்.
கணவனும் மனைவியும் அந்தக் குழந்தையை கொஞ்சுவதிலே, தங்கள் துயரை சற்று மறந்தனர்.
ஆனால், இந்த உலகம் சும்மா இருக்குமா?
கடன் கொடுத்த தனிநபர்களில் ஒருவன், ஒருநாள் நாகேஷை தேடிக்கொண்டு, அவன் வீட்டுக்கே வந்துவிட்டான்.
வந்தவனை நல்லமுறையில் உபசரிக்க, நாகேஷ் தன் மனைவியை அழைத்து, காபி எடுத்துவரச் சொன்னான்.
பிரமீளாவை பார்த்தபிறகு, வந்தவனின் பேச்சிலும் பார்வையிலும், பெரிய மாறுதல் தெரிந்தது.
அதை நாகேஷும் பிரமீளாவும் கவனித்துவிட்டனர். வந்தவனை விரைவில் வெளியே விரட்ட பிரயத்தினப் பட்டனர்.
" நாகேஷ்! உனக்கு மகாபாரதக் கதை தெரியுமில்லையா? அந்தப் புராணம் வெறும் கதையல்ல, வேதங்களுக்கு ஈடானது! வாழ்க்கை தர்மத்தை நமக்கு சொல்லித் தருவது!"
" சரிங்க! எனக்கு அவசரமா வெளியே போகவேண்டிய வேலை இருக்கு, நான் உங்களை அப்புறமா உங்க வீட்டிலேயே வந்து பார்க்கிறேனே......"
" ஒரே ஒரு நிமிஷம்! உன் கஷ்டங்கள் தீர்ந்து நீயும் உன் குடும்பமும் நிம்மதியா வாழ, ஒரு யோசனை சொல்றேன்,........"
" சீக்கிரம் சொல்லி முடிங்க......"
" பாண்டவர்களிலே மூத்தவர் தர்மராஜா, சூதாடி துரியோதனுக்கு ராஜ்யத்தை, தன்னை,சகோதரன் நால்வரையும் பந்தயத்திலே வைத்து இழந்தபிறகு, என்ன செய்தார், தன் மனைவி திரௌபதையை பணயம் வைத்து ஆடினதிலிருந்து நாம தெரிஞ்சிக்க வேண்டியது, என்னன்னா, கடன்படும்போது, மனைவியை அடமானம் வைக்கிறதிலே தப்பேயில்லை, நாகேஷ்! என்னிடத்திலே உன் மனைவியை அடமானம் வைத்தால், கொடுத்த கடன் அத்தனையும் வட்டியுடன் திருப்பி தந்தவுடன், பத்திரமா அவளை ஒப்படைச்சுடறேன், இடையிலே உன்னை தொந்தரவு செய்யமாட்டேன், ரெண்டுபேரும் நல்லா யோசனை பண்ணி நல்ல முடிவா எடுங்க! நாளைக்கு வந்து அவளை அழைத்துக்கொண்டு போகிறேன்........"
வந்தவன், தன் பணியை செவ்வனே முடித்துவிட்டு, வெளியேறினான்.
நல்ல குடும்பத்தில், நல்ல வசதிகளுடன், பிறந்து வளர்ந்த நாகேஷ் அதன்பிறகு பேச்சுமூச்சற்று கிடந்தான், பிரமீளாவும்தான்!