ஒரு ஷோகூட ஓடாது, ஏன், டிஷ்டிரிப்யூடர்சே வாங்கமாட்டாங்க, எங்க அனுபவத்திலே உங்களுக்கு நல்லது சொல்கிறோம், அப்புறம் உங்க இஷ்டம்!
ஆனா ஒண்ணு ஞாபகம் வைச்சுக்குங்க! நீங்க உங்க லட்சியக்கனவுகள் நிறைவேறுவதற்காக, குடும்பத்தாரோட சண்டை போட்டு பாகப்பிரிவினை செய்துகொண்டு அத்தனை பணத்தையும் படத்திலே முடக்கியிருக்கீங்க, நீங்க வெற்றி பெற்றால், பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்றுசேரும், இதுதான் உலகத்திலே நடக்கிற சமாசாரம்!
உங்க முதல் படமே தோல்வி அடைந்து, நீங்க ஓட்டாண்டியாகி, ஊருக்கு திரும்பினீங்கன்னா, உங்கவீட்டு நாய்கூட உங்களை சீண்டாது, உங்களை விரட்டியடிப்பாங்க! ஞாபகம் வைச்சுக்குங்க!
இவ்வளவும் ஏன் சொல்றோம்னா, இந்தப் படம் தோல்வி அடைஞ்சா, உங்க பணம் போறது மட்டுமில்லே, எங்க பேரு, மார்க்கெட் எல்லாம் சரிஞ்சிடும், இது ஒரு கூட்டுமுயற்சி!"
இப்படி பயமுறுத்தினால், புதிதாக துறைக்கு வந்திருக்கிற நாகேஷ் எப்படி தாங்கமுடியும்?
எடுத்த கால்ஷீட்களையே மறுபடியும் மாற்றி எடுத்து செலவை எக்குத்தப்பாக ஏற்றிவிட்டனர்.
வங்கிகள் மேற்கொண்டு கடன் தர முன்வராத நிலையில், வேறுவழியின்றி தனிநபர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி அசலைப்போல் ஐந்துபங்கு வட்டிக்கு கடன் வாங்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
ஆறு மாதங்களில் எடுத்து முடிக்கவேண்டிய படம், இரண்டு ஆண்டுகளானபின், முடிந்து வினியோகஸ்தர்களை நாடியபோது, ஹீரோயின், ஹூரோவின் மார்க்கெட் சரிந்து, புதிதாக வட இந்தியாவிலிருந்து யார் யாரோ தமிழ் திரையுலகில் நுழைந்து பிரபலமாகி விட்டதால், நாகேஷின் படத்தை எவரும் வாங்க முன்வரவில்லை.
அப்போது, ஒரு தொலைக்காட்சி சேனலின் முதலாளி படத்தை பத்து லட்ச ரூபாய்க்கு வாங்க முன்வந்ததும், வந்தவரையில் போதும் என நாகேஷ் விற்கும்படி ஆகிவிட்டது.
அப்போதுதான், அவனுக்கு இந்த உலகின் உண்மையான முகம் புரிந்தது.
மனம் உடைந்துபோய், வாடகைக்கு வீடு எடுத்து, தங்கியிருந்தபோது, கிடைத்த ஓரிரு நண்பர்களும் அவனுக்கு, கவலையை மறக்க, ஏமாற்றத்தை எதிர்கொள்ள, குடிப்பழக்கத்தை கற்றுத் தந்தனர்.
அவர்கள் செய்த ஒரே ஒரு நல்ல காரியம், பிரமீளாவை அவனுக்கு திருமணம் செய்து வைத்தது!
எப்படியோ, வட்டியில் பகுதியை அவ்வப்போது கடன் கொடுத்தவர்களுக்கு செலுத்தி, இரண்டாண்டுகள் சமாளித்தான்.