சிறுகதை - மடிப் பிச்சை! - ரவை
சனிக்கிழமைதோறும் பூரணி தனது காலனியில் உள்ள சிறு குழந்தைகளுக்கு வகுப்பு நடத்தி, தெய்வபக்தி, ஒழுக்கம், அடக்கம் பற்றியெல்லாம் சொல்லிக் கொடுப்பாள்.
மதியம் இரண்டு மணிக்கு துவங்கி ஒரு மணி நேரத்தில் முடிந்துவிடும்!
பெற்றோர்களும் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை வகுப்புக்கு அனுப்புவார்கள்.
பொங்கல், தீபாவளி, நவராத்திரி விழாக்களின்போது, பூரணி குழந்தைகளுக்கு ஆடல், பாடல் சொல்லிக் கொடுத்து அவர்களை பொதுமக்கள முன்பு அரங்கேற்றி பெற்றோரையும் மற்றோரையும் மகிழ வைப்பாள்.
அந்த காலனியில் உள்ள எல்லா குழந்தைகளும் வகுப்பில் கலந்து கொள்வதில்லை. பத்து, பதினைந்து குழந்தைகள்தான் வருவர்.
ஆனால், ஒரு முறை வகுப்புக்கு வந்த குழந்தைகள் வருடக்கணக்கில் வகுப்புக்கு தொடர்ந்து வருகிறார்கள்.
இப்படித்தான், அன்றும் பூரணி, மதியம் இரண்டு மணிக்கு, வந்திருந்த குழந்தைகளுக்கு வகுப்பு துவங்குகிற நேரத்தில், ஒரு ஆறு வயது சிறுவன் கையில் ஒரு புத்தகத்துடன் வந்து நின்றான்.
" உள்ளே வாப்பா! வந்து உட்கார்!"
சிறுவன் தலை குனிந்தவாறு அமர்ந்தான்.
" உன் பெயரென்ன?"
" குமார்!"
அதன்பிறகு, பூரணி வகுப்பு நடத்துவதில் கவனத்தை செலுத்தினாள். முடிவில், வந்திருக்கும் குழந்தைகளுக்கு சாப்பிட பிஸ்கட் கொடுப்பது வழக்கம்.
அன்றும் பூரணி ஒரு தட்டில் பிஸ்கட்களை வைத்து, குழந்தைகளிடம் நீட்டினாள். வழக்கம்போல, குழந்தைகள் தலைக்கு இரண்டு பிஸ்கட்கள் எடுத்துக் கொண்டன.
இறுதியாக, புதிதாக வந்திருந்த ஆறு வயது சிறுவனிடம் தட்டை நீட்டி பிஸ்கட்டை எடுத்துக் கொள்ளச் சொன்னாள்.
" சாரி, டீச்சர்! எனக்கு வேண்டாம்......."
" ஏம்ப்பா! உனக்கு பிஸ்கட் பிடிக்காதா? வேற ஏதாவது தரட்டுமா?"
" சாரி டீச்சர்! எனக்கு எதுவும் வேண்டாம். நான் வெளியே எவரிடமும் கையேந்தி எதையும் பெற்று சாப்பிடக்கூடாதுன்னு என் அம்மா சொல்லியிருக்காங்க!....நான் வரேன், டீச்சர்!"
"கொஞ்சம் இருப்பா! இந்த வகுப்புக்கு நீ புதுசா வந்திருக்கே, யார், எங்கிருந்து வரே, உங்க அப்பா, அம்மா பெயர் எல்லாம் தெரிஞ்சிக்கலாமா?"