போயிருக்காங்களா? நான் உங்களுக்கு துணையா ராத்திரியிலே தங்கட்டுமா?"
என்று கேட்ட லீலாவை இறுக கட்டியணைத்து அழுதாள், பூரணி!
லீலாவுக்கு ஒன்றும் புரியவில்லை!
தன்னை தேற்றிக்கொண்டு, பூரணி லீலாவிடம் மடிப்பிச்சை கேட்டாள், தன் சேலைத் தலைப்பை விரித்து இரு கரங்களிலும் பிடித்து லீலாவின் முன் நீட்டினாள்.
" லீலா! நீ பிறந்தவுடனேயே பெற்றவளால் குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்ட அனாதை!
நானோ, பிறந்தவுடனேயே பெற்றவளால் இந்த வீட்டில் தூக்கி எறியப்பட்ட அனாதை!
லீலா! உனக்கும் தாய்ப்பால் கிடைக்கவில்லை!
எனக்கும் கிடைக்கவில்லை!
நீ வளர்ந்தது, அனாதை இல்லத்தில்! நான் வளர்ந்தது, இந்த வீட்டில் வாடகைத் தாயின் மடியில்!
நீ வறுமையில் வளர்ந்தாய்! நான் வசதியில் வளர்ந்தேன்!
உனக்கு உன்னைப் பெற்றவள் யாரெனவே தெரியாது, எனக்கு என்னைப் பெற்றவளை நன்கு தெரிந்தும், வெளியில் சொல்லக்கூடாது என்ற தண்டனையும் கட்டுப்பாடும்!
என்னைப் பெற்றவளை இந்த நாடே அறியும், அவளை மக்கள் கூட்டமே பாராட்டி கொண்டாடும், ஆனால் என்னால் அவளை 'அம்மா!' என அழைக்க முடியாது!
உனக்கு இருபது வயது! எனக்கு இருபத்தைந்து வயது!
உனக்கு ஒரு மகன் இருக்கிறான், உறவு பாராட்ட!
எனக்கு எவருமேயில்லை!
என்னைப் பெற்றவள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிற திரைப்பட நடிகை! அவள் ஒரு குழந்தையின் தாய் என்பது வெளியில் தெரியக்கூடாதாம்! தெரிந்தால், மார்க்கெட் சரிந்துவிடுமாம்! வருமானம் சிறுகச் சிறுக குறைந்து வற்றிப் போய்விடுமாம்!
பொதுவாக, பெற்ற தாயை தெய்வத்துக்கு இணையாகச் சொல்வார்கள். கோவில் கட்டாமலேயே, கும்பிடுவார்கள்! என்னைப் பெற்ற தாயை மக்கள் கோவில் கட்டியே கும்பிடுகிறார்கள், தாயாக அல்ல, நடிகையாக!
அதில்தான் அவளுக்குப் பெருமை!
எனக்கு இந்த வீடு, வங்கியில் நிறைய பணம், கல்லாரியில் படித்துப் பெற்ற பட்டம் எல்லாம் இருந்தும், நான் எந்தக் காரணத்தைக் கொண்டும் என் தாயை 'அம்மா'என உறவு கொண்டாட முடியாத அவலம்!
என் இதயமே வெடித்துவிடும் போலிருக்கிறது, லீலா!
நான் உன்னிடம் கேட்கிற மடிப்பிச்சை என்ன தெரியுமா?
நீயும் குமாரும் என்னுடன் நிரந்தரமாக இந்த வீட்டில் தங்கவேண்டும்! உங்களுடன் உறவாடி நான் என் துக்கத்தை மறக்கவேண்டும்!
பிச்சை போடுவாயா, லீலா?