சிறுகதை - அவர்களே வழிகாட்டி! - ரவை
" மதி! நமக்கு தெரியாத பல விஷயங்களில், சில விஷயங்கள் மட்டும், அவை நமக்கு தெரியவில்லை என்பது தெரிகிறது......."
" ஆரம்பிச்சிட்டியா, உன் பிதற்றலை! ரகு! கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடறியா?"
" மதி! ப்ளீஸ்! இதை மட்டும் கேளேன்! இது நம் உயிர் சம்பந்தப்பட்டது, எப்படி உயிர் வாழ்கிறோம்? சுவாசித்து பிராணவாயுவை உட்கொண்டு வாழ்கிறோம், அந்த பிராணவாயு இல்லைன்னா, செத்துப் போய்விடுவோம், இல்லையா?"
" சரி, சீக்கிரம் முடி!"
" மதி! உட்கொள்கிற காற்றில் கரியமிலவாயுவைப் பிரித்து வெளியே தள்ளிவிட்டு, பிராணவாயுவை மட்டுமே ஏற்கிறோமே, அது எப்படி? நம் அறிவுக்கு தெரியாத இந்த விஷயம் நம் உடலின் பகுதியான நாசிக்கு தெரிந்திருக்கிறதென்றால், உடலுக்கு தனியாக அதற்கென வேறொரு அறிவு இருக்குங்கிறதை ஒப்புக்கிறயா?"
" ரகு! வடையை எண்ணச் சொன்னால், துளையை எண்ணக்கூடாது, அதை தெரிந்துகொள்வது அவசியமா?"
" அடிப் பாவி! சினிமா நடிகை தன் மூன்றாவது கணவனை ஏன் டைவோர்ஸ் செய்தாள் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாயிருக்கே, நீ எப்படி உயிர் வாழ்கிறாய் என்பதை தெரிந்து கொள்ள அவசியமில்லை என்கிறாயே!"
"ரகு! ஏகப்பட்ட பணத்தைக் கொடுத்து பிசினஸ் க்ளாஸ் ஏர் டிக்கெட் வாங்கிட்டு, நிம்மதியா நியூயார்க் போய் சேருகிற வரையிலும் ஜாலியா தூங்காம, இப்படி என் உயிரை வாங்கிறியே, நியாயமா? உங்கம்மா அப்பவே என்னை எச்சரித்தாங்க, 'ரகு கொஞ்சம் லூசு! அவனை கட்டிக்க, யோசித்து முடிவு எடு'ன்னு! காதல், கத்திரிக்காய்னு எதையோ நிஜம்னு நம்பி, தப்பு பண்ணிட்டேன், இப்ப அவஸ்தைப்படறேன்........"
" மதி! இப்பக்கூட ஒண்ணும் கெட்டுப் போயிடலே, உனக்கு என்னை பிடிக்கலேன்னா, நியூயார்க் போய் சேர்ந்ததும், முதல் வேலையா, என்னை டைவோர்ஸ் பண்ணிட்டு ஜாலியா அந்த குண்டு ராமனை கட்டிக்கிட்டு நிம்மதியா இரு!"
" ஆசை, தோசை, அப்பளாம், வடை! என்னை கழட்டிவிட்டு, அந்த மேனாமினுக்கி ரேகாவோட சுற்றலாம்னு பார்க்கிறியா? நடக்காது!"
" அப்ப என்னை பேச விடு!"
" சரி, பேசித் தொலை!"