" காந்திமதி! நீ ரகுவை மணந்துகொள்வதில், எனக்கு பூரண சம்மதம்! ஆனால், நீயும் பெண் என்னைப் போல என்பதினால், உன்னை எச்சரிக்கவேண்டியது என் கடமை!"
" எச்சரிக்கையா?"
" ஆம், எச்சரிக்கைதான்! நான் சொல்லப் போவதை தீர யோசித்தபிறகு, நல்ல முடிவெடு!
நீ உன் சிறிய குடும்பத்தில் உன் தந்தையின் முழு அன்புக்கு பாத்திரமாகி, செல்லமாக வளர்க்கப்பட்டவள்! அதனால், உன் மனப் பக்குவம் வித்தியாசமானது!
உன் விருப்பப்படி, மற்றவர்கள் நடக்கவேண்டும் என எதிர்பார்ப்பாய்! அதில் தவறில்லை!
ஆனால், ரகுவின் மனப் போக்கு, ஒருமாதிரியானது! எப்போதும் சிந்தித்துக் கொண்டேயிருப்பான்! அது பரவாயில்லை, அவனுடன் பழகுபவர்கள் தன் சிந்தனைக்கு ஆதரவு தரவேண்டும், பகிர்ந்து கொள்ளவேண்டும், ஆமோதிக்கவேண்டும் என்பதிலே எவருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டான்.
அவன் தன்னை திருத்திக் கொள்வான் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. ஏன் தெரியுமா? இந்த விஷயத்தில் ரகு அவன் தந்தையைப் போல, பிடிவாதக்காரன்!
ரகுவின் தந்தை இந்த பிடிவாத குணத்தால், தன்னைப் பெற்றவர்களிடமிருந்து பிரிந்து தனியே வாழ்ந்தவர். குடும்பச் சொத்துக்களை இழந்தவர். எல்லாம், அவருக்கு என்மீதிருந்த பிரியத்தினால்!
என்னை அவர் மணப்பதிலே, அவரை பெற்றவர்களுக்கு விருப்பமில்லை, காரணம் என் ஏழ்மை!
காந்திமதி! எல்லா அம்சங்களிலும், ரகு அவன் தந்தையைப் போலவே இருக்கிறான். அவன் ஒருமாதிரி!
யோசித்து முடிவெடு!"
காந்திமதி உணர்ச்சி வசப்பட்டு, ரகுவின் தாயை கட்டியணைத்துக் கொண்டாள்.
" அம்மா! ஆம், இனி நீங்கள்தான் என் தாய்! என் வாழ்வு ஏமாற்றம் எதுவுமின்றி சிறப்பாக அமையவேண்டும் என மனமார ஆசைப்பட்டு, தங்கள் மகனைப் பற்றியே ஒளிவுமறைவில்லாமல், முன்பின் அறிமுகமில்லாத என்னிடம் பகிர்ந்து கொண்டீர்கள்! எனக்கு ரகுவின் உறவையும்விட, தங்கள் உறவு அவசியம் தேவை! அதற்காகவே, அவனை உடனடியாக மணந்து கொள்ளப் போகிறேன், இது சத்தியம்!"
ரகுவின் தாய், பிறகு தன் மகனிடம் மதியின் சந்திப்பையும் அவள் பேசியதையும் விவரமாக தெரிவித்தாள்.