அங்கே அறிவு இயங்காமலேயே உடல் உறுப்பு செயல்படுகிறதே, உண்மையா இல்லையா? அவரைவிட, அவர் உடல் உறுப்புகளுக்கு பகுத்தறிவு உள்ளதா இல்லையா?........."
மீண்டும், மன்றம் எழுந்து நின்று கரவொலி எழுப்பியது.
நடுவர் குறுக்கிட்டுப் பேசினார்:
" ரகுநாதன் இந்தக் கேள்விக்கு பதில் சுருக்கமாக தந்தவுடன், நான் எனது முடிவுரையை தருகிறேன்."
ரகுநாதன் எழுந்து நின்று சில வினாடிகள் எதுவும் பேசாமல், அவையை பார்த்தபோது, "பதில் இல்லையா? தோல்வியை ஒப்புக்கொள்!" என்று அவையிலிருந்து குரல் வந்தது.
சிரித்துக்கொண்டே, ரகுநாதன் பதில் கூறினான்.
" எதிரணி தலைவி, தன்னை அறியாமலேயே, எனது கட்சிக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
பறவையும் வீட்டில் வளரும் செல்லப் பிராணியும் நம் உடலின் உறுப்புகளும் இன்பத்தைத் தேடி தவறான பாதையில் செல்லும்போது, விட்டில் பூச்சியைப் போல, பொறியில் அகப்படும் எலியைப்போல, மது அருந்திய உடல் உறுப்புகளைப் போல, அழிவை தேடிக் கொள்வதை எதிரணித் தலைவி மறுக்கமுடியுமா? அதனால், அறிவு ஆக்கம் தரும். இன்பவேட்டை அழிவைத் தரும் என்பதே எங்கள் தரப்பு வாதம்"
நடுவர் தீர்ப்பென்ன என்பது நம் கதைக்கு அவசியமல்ல; அந்தக் கணத்தில் தான், ரகுவுக்கும் மதிக்கும் இடையே காதல் பிறந்தது என்பதே!
பட்டிமன்றம் நடந்து முடிந்தபின், மதி, ரகு இருவருமே மாணவர்களிடையே பிரபலமானார்கள். இருவரை சுற்றிலும் எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.
எதேச்சையாக ஒருநாள் கல்லூரி லைப்ரரியில் இருவரும் தனிமையில் சந்தித்தனர்.
ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டபிறகு, தங்கள் தனிப்பட்ட குடும்ப சூழ்நிலை, விருப்பு-வெறுப்புகள், எதிர்கால கனவுகள் என்பனவற்றை பரிமாறிக் கொண்டபோது, ஒரு விஷயத்தில் இருவரும் தீவிரமாக இருப்பது, தெரியவந்தது!
ஆம், மேற்படிப்புக்கு இருவரும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருப்பது!
அது போதாதா, இருவரும் நெருங்கி வருவதற்கு?
பேராசிரியர் சிங்கத்துக்கும் ரகுவை தனது மருமகனாக ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி!
மதி, ரகுவின் தாயை தனியே சந்தித்து தான் ரகுவை மணக்க விரும்புவதாக தெரிவித்தாள். அப்போது ரகுவின் அன்னை தன் இதயத்தை திறந்து காட்டியபோது, அதில் மதி சொக்கிப் போய், தான் அப்படிப்பட்ட ஒரு நல்ல தாய்க்கு மருமகளாவதில் பேரார்வம் கொண்டாள்.
அப்படியென்ன சொன்னாள், ரகுவின் தாய்?