முப்பது வீடுகளில் உள்ளவர்களும் அந்த இரண்டைத்தான் உபயோகித்தாக வேண்டும் என்றால், குடியிருப்போர் படும் கஷ்டங்களை சொல்லியா தெரியவேண்டும்?
சரி, பிறகு வந்து பார்க்கலாம் என்று முடிவெடுத்து, பூரணி தன் இருப்பிடம் திரும்பினாள்.
இரவு எட்டு மணிக்கு மேலே போனால், லீலா வீட்டில் இருப்பாள் என்று யோசித்துக் கொண்டே, கைகடிகாரத்தை பார்த்தாள். மணி ஏழரை!
இப்போது கிளம்பினால், சரியாக இருக்கும் என புறப்பட்டு, வீட்டு வாசலுக்கு வந்தாள்.
குமாரும் அவனுடன் ஒரு இருபது வயது பெண்ணும் நின்றுகொண்டிருந்தனர்.
"வாங்க! வாங்க உள்ளே! ஏன் வெளியிலேயே நிக்கிறீங்க?"
இருவரும் தயங்கித் தயங்கி உள்ளே வந்து நின்றனர்.
" உட்காருங்க, சோபாவிலே!"
" பரவாயில்லேம்மா! நிக்கறோம்....எங்களுக்கு இதுதாங்க பழக்கம், பெரியவங்க முன்னே உட்காரமாட்டோங்க!"
" என் விருந்தாளியாக வந்திருக்கீங்க! பெரியவங்க, சின்னவங்கன்னு பேதமே கிடையாது, உட்காருங்க!"
"பரவாயில்லே.....நீங்க வீட்டுக்கு வந்திருந்ததா, அக்கம் பக்கத்திலே சொன்னாங்க, அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தோங்க..........."
" லீலா! அதுதானே உங்க பேரு, குமார் உங்க தம்பியா?"
இருவரும் தலை குனிந்து சிரித்தனர்.
"ஏன் சிரிக்கிறீங்க?"
" குமார், என் புள்ளைங்க!......."
பூரணி ஆச்சரியத்தில் எழுந்து நின்றாள்.
" என்ன சொல்றே?"
" ஆமாம்மா! எனக்கு பதினான்கு வயது இருக்கும்போது, எனக்குப் பிறந்தாங்க, குமார்!"
" பதினான்கு வயதா? சின்னப் பெண்ணா இருக்கும்போதே, கட்டிவைச்சிட்டாங்களா, அடப் பாவமே!"
" ஆமாங்க, என்னை வளர்த்தவங்க என்னை கயத்தாலே கட்டித்தாங்க வைச்சாங்க, சம்மதிக்கவைக்க......"
" என்ன லீலா சொல்றே?"
" அம்மா! உங்க வாழ்க்கை மாதிரி, எங்க வாழ்க்கையை நினைக்காதீங்க...."