எல்லோருக்கும் இரண்டு வேளை சாப்பாடு தயாரிக்கும் பணியில், வயதுக்கு வந்த லீலாவையும் அவள் வயதொத்த மற்ற சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி, ஈடுபடுத்துவார்களாம்.
பகலில் இடுப்பொடிய, இந்தப் பணியில் ஈடுபட்டு இரவில் தன்னை அறியாமல் தூங்குகிறபோது, காப்பாளரின் எடுபிடிகள் அவளை எழுப்பி, நன்கு சிங்காரித்து, எங்கோ அழைத்துப் போவார்களாம், பெரிய ஓட்டல்களாகவும், விடுதிகளாகவும் இருக்குமாம்!
லீலாவை அங்கு அழைத்துச் சென்ற எடுபிடி, அங்கிருந்த பெரிய மனிதரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, திரும்பிச் சென்றுவிடுவானாம், மறுநாள் காலையில் வந்து அழைத்துச் செல்வானாம், இல்லத்துக்கு!
லீலா இதற்கு ஒத்துழைக்க மறுத்த நாட்களில், அடி உதை கயிற்றால் கட்டிப்போடுவது இத்யாதி மரியாதைகள் நடக்குமாம்.
இப்படிப்பட்ட உலாக்களின் விளைவாக, லீலா கர்ப்பிணியானபோது, கர்ப்பத்தை கலைக்க ஏதேதோ தவறான மாத்திரைகள் கொடுத்ததில், அவள் உடல்நிலை மோசமாகி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டாளாம்.
அங்கிருந்த ஒரு நல்ல டாக்டர் லீலாவின் உயிரை காப்பாற்றினாலும், கர்ப்பத்தை கலைக்க முடியவில்லையாம். அதன் விளைவாகப் பிறந்தவனாம், மகன் குமார்!
அந்த நேரத்திலும், லீலாவுக்கு ஒரு சந்தோஷமாம்! பிறந்த சிசு, பெண்ணாகப் பிறக்காமல், ஆணாகப் பிறந்ததே என்று!
பெண்ணாக பிறந்திருந்தால், அதுவும் தன்னைப்போல துன்பத்துக்கு ஆளாகியிருக்குமே என்று நினைத்து ஆறுதல் அடைந்தாளாம்.
குமாரும் தனது ஐந்து வயது வரையில் இல்லத்தில்தான் வளர்ந்தான்.
அப்போது, லீலா காப்பாளரின் காலில் விழுந்து தன்னை விடுவிக்க வேண்டியதற்கு, அவரும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டாராம்.
லீலா மாத சம்பளத்துக்கு தொடர்ந்து இல்லத்தில் பணியாற்றவேண்டும் என்பதே அந்த நிபந்தனை!
"இதுதாங்க இன்று என் நிலை! என் புள்ளே பள்ளிக்கூடத்திலே ஏற்பட்ட நல்ல தொடர்பாலே, உங்க வகுப்பிலே சேர்ந்திருக்கிறான். அம்மா! நீங்கதாம்மா நல்லபடியா உருவாக்கணும்......." என கதறி காலில் விழுந்த லீலாவை தேற்றிய பூரணி கண்கள் குளம் கட்டியிருந்தன!
லீலா அதை கவனித்தாலும், ஏனென கேட்கவில்லை.
" அம்மா! உங்களோட இந்த வீட்டிலே வேற யாருமே இல்லையா? ஊருக்குப்