பூரணி உள்ளே ஓடிப்போய், இருவருக்கும் சாப்பிட பலகாரம் கொண்டுவந்து அவர்கள் கையில் கொடுத்து, "முதலில் ரெண்டு பேரும் சாப்பிடுங்க! பிறகு நிறைய பேசுவோம்! ரொம்ப லேட்டாயிட்டா, இங்கேயே நீங்க படுத்துக் கொண்டு விட்டு, விடிந்ததும் போகலாம்........."
மந்திரத்தில் கட்டுண்டதுபோல, இருவரும் சாப்பிட்டனர். பாவம்! மிகுந்த பசி! சாப்பிட்டு முடித்ததும், லீலா இரண்டு தட்டுகளையும் கழுவ தண்ணீர் தொட்டியை சுற்றுமுற்றும் பார்த்தாள்.
பூரணி அவர்களுக்கு குவளையில் நீர் கொடுத்து தட்டிலேயே கழுவிக்கொள்ள சொன்னதோடு, ஈரக் கையை துடைத்துக் கொள்ள டவலும் நீட்டினாள்.
இருவரும் பூரணியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டனர்.
" ஏன் அழுவறீங்க? எழுந்திரிங்க!"
" அம்மா! எங்களை இந்தமாதிரி மனுஷங்களா மதிச்சு அன்பா நடத்துறது, முதல் அனுபவங்க! எங்க உடம்பே சிலிர்க்குதும்மா!"
மூவரும் பேசிக்கொண்டிருந்தனர், நெடுநேரம்!
பிறந்தவுடனேயே, லீலாவை பெற்ற மகராசி, அவள் கன்னிப்பெண்ணாயிருந்து தவறான வழியில் பெற்றாளோ அல்லது முறையாக திருமணமான தம்பதிகளோ, பெண்சிசு வேண்டாமென நினைத்தார்களோ, தெரியாது, குப்பைத் தொட்டியில் அவளை வீசிவிட்டார்களாம்!
அந்தக் குழந்தையை குப்பை அகற்றுபவன் கண்டதும், போலீஸில் ஒப்படைத்து, பிறகு அவர்கள் குழந்தையை அனாதை இல்லத்தில் ஒப்படைத்ததும் பழைய கதை!
அந்த அனாதை இல்லத்தில், லீலா, தான் வளர்ந்த கதையை விவரிக்கும்போது, சிறுவன் குமார் துங்கிவிட்டான்.
அந்த இல்லத்தின் காப்பாளர் தன்னைப்பற்றி, தன் பிறப்பைப் பற்றி சொன்னதைத் தவிர, லீலாவுக்கு வேறெந்த நபரிடமிருந்தும் எந்த தகவலும் இல்லை!
இல்லத்தில், லீலாவுக்கு நல்லது, கெட்டது இரண்டும் நடந்ததாம்!
பள்ளிக்கு அனுப்பி, ஏழாம் வகுப்பு வரை படிக்க வைத்தார்களாம்.
ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, லீலா 'பெரியவ'ளானாளாம்!
அன்றிலிருந்து அவளுக்கு பிடித்தது, 'சனியன்'!
அந்த இல்லத்தில், குழந்தைகளைத் தவிர, முதியோர்களும், நோயுற்று உறவினரால் கைவிடப்பட்டவர்களும், ஆதரவற்ற விதவைகளுமாக மொத்தம் நூறுபேர் இருந்தார்களாம்.