சிறுகதை - பூகம்பம் - ரவை
'பிலிப்பைன்ஸில் 6.78 அளவு பூகம்பம்!'
இந்த செய்தியை படித்ததும், சுகுணாவின் மனதில் தோன்றிய பயம், தான் சொல்லப்போவதை கேட்டவுடனே தனது குடும்பத்தில் வெடிக்கப்போகும் பூகம்பத்தின் அளவு பத்து புள்ளிகளை தாண்டிவிடுமே, என்பதே!
இந்த பயத்தினால் ஏற்கெனவே காலம் கடத்திவிட்டாள்! இனியும் காலம் கடத்தமுடியாது, காரணம்,
அவள் வயிறு காட்டிக் கொடுத்துவிடும்!
என்ன செய்யலாம், எப்படி நிலமையை எதிர்கொள்வது, தான் நேரிடையாக சொல்வதா அல்லது வேறு யார் மூலமாகவோ, நடந்துவிட்டதை, சரியோ, தவறோ, பெற்றோரின் காதில் எட்டும்படி செய்வதா, என ஒரு சிறு குழப்பம்!
நடந்துவிட்ட தவறுக்கு பொறுப்பானவனிடமே, யோசனை கேட்டுப் பார்க்கலாம் என முடிவு செய்தாள்.
அன்று மாலை, வழக்கமான இடத்தில், அவனை சந்தித்தபோது, பேசினாள்.
" ஆண்டவனின் ஒருதலைப்பட்சமான அநீதியை என்னால் ஜீரணிக்கவே முடியலைடா, ராஜா!"
" சுவேதா! புதிர் போடாதே! நேரடியாக விஷயத்தை சொல்லு!"
" ஆணும் பெண்ணும் சேர்ந்து செய்த பிழையில், பெண்ணை மட்டும் காட்டிக் கொடுக்கிற செயல், அநீதியா நீதியா?"
" ஓ! அதை சொல்றியா? புரிந்துவிட்டது! சுவேதா! உனக்கு நான் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன், நடந்தது ஒரு பிழையல்ல, தற்செயலாக நடந்துவிட்ட நிகழ்ச்சி! இதை வெளியே சொல்வதிலே, நாம் அளவுக்கு மீறி பயந்து நடுங்கவேண்டியதே இல்லை!"
" செய்வதை செய்துவிட்டு, சமாளிக்கிறதைப் பார்!" என்று சொல்லியவாறே, அவன் கன்னத்தில் இடித்தாள்.
"ஆங்! வலிக்கிறது....." என்று அவனும் நடிக்க, இருவரும் பூகம்பத்தை ஒரு கணம் மறந்து, தங்கள் இன்ப சாம்ராஜ்யத்தில் ஊர்வலம் வந்தனர்.
" டேய்! இப்படித்தான், நாம் அன்றும் நம்மை மறந்து இணைந்துவிட்டோம், இப்போது, மாட்டிக்கொண்டு தவிக்கிறோம், இல்லை, இல்லை, தவிக்கிறேன்!"
" சுவேதா! ஒரு விஷயம் கவனித்தாயா? எத்தனையோ தம்பதிகள் பத்து வருஷம், பதினைந்து வருஷம், குழந்தைக்காக தவம் கிடக்கிறபோது, நாம் ஒரே ஒருநாள்தான், சில வினாடிகள்தான், கூடினோம்! கைமேல் பலன் கிடைத்துவிட்டது, பார்! என் திறமையை நீ மெச்சாமல், குற்றவாளியாக்கிறியே, நியாயமா?"