" இதப் பாருங்க! நம் இரண்டு குடும்பமும் இணைவதற்கு தெய்வ சம்மதம் இல்லை என்று தெளிவாகத் தெரிகிறது. சின்னஞ்சிறிசுகள் இரண்டும் ஒன்று சேர்வதை விதி தடுக்கிறது, நாம் என்ன செய்ய முடியும்?
கொஞ்ச காலத்துக்கு இருவரையும் பிரித்து வைப்போம்! அவர்கள் சந்தித்துக் கொள்வதை தடை செய்வோம்!
இருவரும் இந்த விஷயத்தை அறவே மறப்பதற்கு, அது உதவி செய்யும்!"
இந்த இக்கட்டான சூழ்நிலையில், மீண்டும் ரகசியமாக சுவேதாவும் ராஜாவும் சந்தித்துக் கொண்டனர்.
" ராஜா! என்னை கைவிட்டுடாதே! என் மானம் பறிபோனபிறகு என்னால் வாழ முடியுமா? தற்கொலை செய்துகொள்வதைத் தவிர, வேறு வழியில்லை......"
ராஜா சுவேதாவை ஆதரவாக அணைத்து சிறிது நேரம் யோசித்துவிட்டு, முடிவாக தெரிவித்தான்.
" நான் என் பெற்றோரிடம் நடந்ததை சொல்லி, சம்மதிக்கவைத்து, அவர்களை மீண்டும் உன் வீட்டுக்கு அனுப்புகிறேன்! அதற்குள், நீயும் உன் பெற்றோரிடம் உண்மையை கூறிவிடு!
அவர்கள் சம்மதித்தால், அடுத்த வாரமே, திருப்பதி தெய்வ சந்நிதானத்தில் நான் உன் கழுத்தில் தாலி அணிவிக்கிறேன், அவர்கள் சம்மதிக்காவிடில், வேறு வழியின்றி, பதிவுத் திருமணம் செய்து கொள்வோம், இது சத்தியம்!"
சொன்னபடி செய்தான்.
ஆனால், நடந்த பிழையை அறிந்ததுமே, இரு குடும்பத்தாரும் நிலை குலைந்து போயினர்.
அவர்களுக்கும் எப்படி இந்த பிரச்னையை தீர்த்து வைப்பதென புரியவில்லை!
" ராஜா! சுவேதா! இருவரும் நான் சொல்லப் போகிற தீர்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதாயிருந்தால், மேற்கொண்டு பேசுவோம்...."
இருவரும் சம்மதித்தனர்.
" பூஜையறையிலே உள்ள பெருமாளின் முன்பு, திருவுளச் சீட்டு குலுக்கிப் போட்டு, விவரமறியாத குழந்தையை இரண்டில் ஒரு சீட்டை எடுக்கச் சொல்வோம், அந்த குழந்தை எடுத்து தருகிற சீட்டின்படி எல்லோருமே கட்டுப்படுவோம். சம்மதமா?"
இருவரும், யோசித்து முடிவு சொல்ல, சிறிது நேரம் பெற்றுக்கொண்டு தனியே பேசிக்கொண்டனர்.
" சுவேதா! எனக்கென்னவோ இது விஷப் பரீட்சையாக தோன்றுகிறது. திருவுளச்சீட்டு நமக்கு