" வர்ற கோபத்துக்கு......." என்று கையை ஓங்கியவளின் முகம் மட்டும் சிவந்திருந்தது, வெட்கத்தில்!
சிறிது நேரம், இருவரும் அன்று நடந்ததை அசை போட்டனர்!
சுவேதா அப்போது பட்டப் படிப்புதேர்வில், கல்லூரியில் முதல் மாணவியாக, அதிக மதிப்பெண்களுடன் தேர்வடைந்து பல நிறுவனங்களில் வேலைக்கு மனு போட்டுக் கொண்டிருந்தாள்.
அந்த நிறுவனங்களில் ஒன்றிலிருந்து அவளை நேர்காணலுக்கு அழைத்திருந்தனர். பெரிய நிறுவனம்! அகில இந்தியாவிலும் கிளைகள் உள்ளன. சம்பளம், போனஸ், லீவு, பஞ்சப்படி, பதவி, ஆண்டுக்கொரு முறை சுற்றுலா போய்வர பண உதவி, மருத்துவ வசதி எல்லாம் உள்ள நிறுவனம்!
அவள் மட்டுமல்ல, அவள் பெற்றோர், உறவினர், நண்பர்கள், யாவரும் அவளுக்கு அந்த வேலை கிடைக்க, கடவுளை பிரார்த்தித்தனர்.
அந்த நிறுவனத்திலிருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்ததும், எல்லோரும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர்.
எல்லாம் சரிதான், ஆனால் பிரச்னை என்னவெனில், அந்த நேர்காணல், சென்னையில் இல்லை, பெங்களூரில்!
அதுவும், முதல் சுற்றில், தேர்வு பெற்றால், அடுத்த நாளே இரண்டாவது சுற்று! இறுதிச் சுற்று, மூன்றாவது நாள்!
சுவேதாவின் பெற்றோர், அவளுடன் துணைக்கு உடன் செல்லமுடியாத நிலை!
பெங்களூரில், சுவேதாவின் தந்தையின் தூரத்து உறவினரின் மகன் ராஜா, வேலை பார்ப்பது நினைவு வரவே, சுவேதாவை ரயிலேற்றி அனுப்பினால் போதும், பெங்களூரில் அவள் ராஜாவின் பாதுகாப்பில் தங்கி, நேர்காணலை முடித்துக் கொண்டு வரலாம் என ஆறுதல் அடைந்தனர்.
அன்று அடைந்த அந்த ஆறுதலின் விளைவுதான், இன்று இந்த விபத்தில் முடிந்திருக்கிறது.
ராஜா, பெங்களூரில் அவன் பெற்றோருடன் வாழ்வதாக கேள்விப்பட்டதும், அவர்கள் பொறுப்பில் சுவேதா அங்கு தங்குவதில், அதுவும் மூன்றே நாட்கள் தங்குவதில், பிரச்னை எதுவும் இருக்காது என நம்பி, சுவேதாவை பெங்களூர் அனுப்பி வைத்தனர்.
சுவேதாவை, பெங்களூர் ரயில் நிலயத்தில், ராஜா சந்தித்து தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.