பின்புறமிருந்து வந்த அந்த இனிமையான குரல் அவனை திடுக்கிட வைத்தது. அத்தையையும்தான்!
திரும்பிப் பார்த்தான், தர்மராசன்!
அங்கே அவன் சிற்றன்னை! புதிதாக வீட்டுக்கு வந்துள்ள மணப்பெண்!
" உங்கப்பா நிரபராதி! ஒரு தவறும் செய்யாதவர்! சரியாகச் சொன்னால், என்னை சாவிலிருந்து மீட்ட தியாகி!"
" தெரியுதே, என்னையும் அத்தையையும் தியாகம் செய்துவிட்டு, உன்னை பலி வாங்கியவர்!"
" அத்தை! நீங்க பெரியவங்க! அவரை கொஞ்சம் பொறுமையா, என்னை பேசவிட சொல்லுங்க! நான் சொல்றதை கேட்டபிறகு, அவர் என்ன முடிவெடுத்தாலும், நான் தடுக்க மாட்டேன்!"
" தர்மா! அவள் என்ன சொல்றான்னு பொறுமையா கேள்டா!"
தர்மராசன் சம்மதம் தெரிவிப்பது போல, மௌனமாயிருந்தான்.
" அத்தை! நீங்க ஒரு நல்ல மனிதனை அவசரப்பட்டு குற்றவாளிக் கூண்டிலே ஏத்திட்டீங்க! இத்தனை வருஷம், மனைவி காலமானபிறகு மறுமணம் செய்கிற சிந்தனையே இல்லாமல், மகனுக்காக பிரும்மசரியம் கடைப்பிடிக்கிறவரை, அதெப்படி ஒரே வினாடியில், துரோகியா நினைக்க முடிந்தது? பெண்ணாசையினால் என்னை கைபிடித்தவரென்றால், அதை இத்தனை காலம் கழித்து, வெளியூரில், உங்களுக்குத் தெரியாமல் என் கழுத்தில் தாலி கட்டி, மனைவியாக என்னை ஏற்பானேன்? சொல்லுங்க! அவர் முன்பே, மனைவி இறந்த மறு வருடமே திருமணம் செய்து கொண்டிருக்க மாட்டாரா, உங்கள் சம்மதம் பெற்று?"
தர்மராசாவும் அத்தையும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர்.
திடுமென யோசனை வந்து, தர்மராசன், குரலை உயர்த்தி, " அப்படின்னா, நீங்க கட்டாயப்படுத்தி அவரை உங்களை மனைவியாக ஏற்றுக்கொண்டாரா?" என எகத்தாளமாக சிரித்தான்.
அவன் சிரித்து முடிக்கும்வரை பொறுமையாக இருந்த அந்தப் பெண், " உங்கள் கேள்விக்கு என் பதில், 'ஆமாம்! என் கட்டாயத்தினால்தான், அவர் என் கழுத்தில் தாலி கட்டி, என்னை தன் மனைவியாக இங்கு அழைத்து வந்திருக்கிறார்........"
" இதென்ன புதுக்கதை? நான் ஒண்ணும் காதிலே பூ செருகி வச்சுக்கலே........" மறுபடியும் எகத்தாளமாக சிரித்தான்.
" உங்க சிரிப்பை கொஞ்சம் மிச்சம் வச்சுக்குங்க, நான் இப்ப சொல்வதைக் கேட்டபிறகு, மிச்சத்தை சிரிங்க!"