சிறுகதை - இது உன் வாழ்க்கை - ரவை
" இதோ பார், பத்மா! உனக்கு இருபத்தோறு வயதாகி, நீ பட்டதாரியாகவும் ஆகிவிட்டாய்! இனி, மேலே படிப்பதோ, வேலைக்குப் போவதோ, கல்யாணம் செய்து கொள்வதோ, எதுவாக இருந்தாலும், நீதான் முடிவு எடுக்கவேண்டும்!
உனக்கு தேவையான பணம், வசதிகளை செய்துதர தயாராக இருக்கிறோம், சரியா?"
" அப்பா! என்னாச்சு, திடீர்னு இப்படி என்னை இடுப்பிலிருந்து கீழே இறக்கிவிட்டு நடை பயிலச் சொல்றீங்க? எனக்கு என்னவோ, உங்க இடுப்பிலே அமர்ந்து சவாரி செய்வதுதான், பிடிச்சிருக்கு!"
" இப்ப, அப்படித்தான் சொல்வே, அப்புறமா எங்களை குறை சொல்வே, இப்ப நானும் அம்மாவும் எங்களைப் பெற்றவங்களை குறை சொல்வதுபோல! வேண்டாம்மா, எங்களுக்கு அந்தப் பழி!"
" அப்படியா! அப்படி என்ன ஆயிற்று, உங்க ரெண்டுபேர் வாழ்க்கையிலே?"
" கதை கேட்கிற ஆசையா? வேண்டாம்மா! வேஸ்ட் ஆஃப் டைம்! ரொம்பக் கசப்பான விஷயம்!"
" அப்பா! நீங்கதானே எப்பவும் சொல்வீங்க, வேம்பு கசந்தாலும், நன்மை செய்யும்னு! சொல்லுங்கப்பா, ப்ளீஸ்! அம்மா! நீயும் வாம்மா!"
சமையலறையிலிருந்தே குரல்
கொடுத்தாள், பத்மாவின் தாய்.
" வாழ்க்கையிலே நீ தெரிஞ்சிக்க வேண்டிய முதல் விஷயமே, இந்தமாதிரி பிறர் வாழ்க்கைக் கதையை கேட்க ஆர்வம் காட்டக்கூடாது!"
" அம்மா! சரியா காதிலே விழலே, இங்கே வந்து சொல்லும்மா!"
பத்மா, தன் அப்பாவை பார்த்து சிரித்தாள். அவரும்தான்!
புடவைத் தலைப்பில் கைகளை துடைத்துக்கொண்டே, பத்மாவின் தாய் சரோஜா வந்து சேர்ந்தாள்.
" சரோஜா! உன் பொண்ணு உன்னை எப்படி ஏமாத்திட்டா, பார்! அவளுக்கு மட்டுமில்லே, இந்த ஊருக்கே நீ சொன்னது கேட்டிருக்கும். உன்னை இங்கே வரவழைக்க அவள் வைத்த பொறியிலே சிக்கிக்கிட்டியே!"
" எனக்குத் தெரியாதா என் மகளைப் பற்றி! இன்னிக்கி அவளுக்கு நாம சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிடுவோம்! நீங்க துவக்குங்க!"
" பத்மா! எங்க அனுபவத்திலேயிருந்து நீ கற்கவேண்டிய முதல் பாடம், எந்த விஷயமானாலும் பெற்றவங்களோட பேசலாம், விவாதிக்கலாம், ஆனா, முடிவு நீதான்