பத்மாவின் தந்தை, சி.ஏ. பட்டம் பெற்று ஆடிட்டராக கம்பெனி நடத்துகிறார்.
பத்மாவின் தாய், கம்ப்யூடர் சாஃப்ட்வேர் பொறியாளராக வேலை பார்க்கிறார்.
இருவருக்குமே சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டு.
அவர்களின் ஒரே மகளாகிய தானும் அந்த அளவு சமூகத்தில் மதிப்பு பெற, தன்னை தகுதியாக்கி
கொள்ளவேண்டும்!
அதற்கு, இருவருடைய தொழில் அறிவும் அனுபவமும் கைகொடுக்கும் வகையில் புதிதாக தொழில் தொடங்கி, பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தலாமா?
அல்லது, தனது இசை, நடனம், பேச்சு, நடிப்புத் திறமையை மூலதனமாக்கி ஊடகங்களில் புகுந்துவிடலாமா? அந்தத் துறையில், வருமானம், மதிப்பு இரண்டுக்குமே வாய்ப்பு உண்டு.
பத்மா இதுவரையில் வெளியூர்களுக்கு தனியாகச் சென்றதில்லை. பெற்றோரோ, கல்விநிறுவனமோ அவளை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும். அதனால், சுய அனுபவம் பெற, முதலில் சில நாட்களுக்கு தனியாக வெளியூர் சென்று, அந்த நேரங்களில், தான் வாழ்வில் அடுத்து எடுக்கவேண்டிய நடவடிக்கைபற்றி சிந்தித்து, முடிவெடுக்கலாமா?
இப்படி ஒன்றின் மேல் ஒன்றாக பத்மாவை யோசனைகள் திணறடித்துக் கொண்டிருந்த நேரத்தில், அவளுடைய நெருங்கிய தோழி கல்பனாவிடமிருந்து போனில் அழைப்பு வந்தது.
பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு, பத்மா தன் காரில் கல்பனாவின் வீட்டை அடைந்தாள்.
அங்கே சென்றபிறகுதான், கல்பனா தன்னை அவசரமாக அழைத்ததின் காரணம்:
பத்மாவுடன் படித்த இன்னும் சில தோழிகளும் அங்கு கூடியிருந்தனர்.
கல்பனா ஏதோ ஒரு திட்டத்துடன்தான் அனைவரையும் அங்கே அழைத்திருந்தாள்.
என்ன திட்டம்? அவளே சொல்வதை கேளுங்கள்:
"தோழிகளே! நாம் அனைவரும் பி.ஏ. பட்டம் பெற்றுவிட்டோம். மேற்கொண்டு என்ன செய்வது என சிந்தித்து வருகிறோம்.
தீவிரமாக சிந்திப்பதல், நமது மூளை சூடேறிவிடுகிறது. அதனால், வெயில் கொளுத்தும் இந்த ஊரைவிட்டு வேறு ஒரு குளிர்ச்சியான ஊரான ஊட்டிக்குப்போய், அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து, கூடி விவாதித்து, நல்ல முடிவு எடுக்கலாம் என ஒரு யோசனை எழுந்திருக்கிறது. உங்கள் அபிப்பிராயத்தை பகிர்ந்து கொள்ளலாம்."
மாற்றுக் கருத்தே இல்லாத காரணத்தால், அடுத்த வாரம் இதே நாளில் கிளம்புவதென முடிவு செய்தபின், கலைந்தனர்.