தினமும் காலையில் எப்போது எழுப்பவேண்டுமென சொல்லு! அப்படியே செய்கிறோம்!"
" ஓகோ! நேற்று நீங்கள் இருவரும் சொன்னதை உடனடியாக அமுல்படுத்தி விட்டார்களா? பேஷ்! இனி நான் அப்பா அம்மாவினால் கைவிடப்பட்ட அனாதையா? தன்னந்தனியாக தவிக்கவேண்டுமா? இது, நீங்கள் இருவரும் உங்களுடைய ஒரே செல்வ மகளுக்கு தரும் பரிசா அல்லது தண்டனையா?"
பின்புறமிருந்து வந்த அப்பாவின் ஆறுதலான அணைப்பு, பத்மாவின் துயரம் கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீர்ப் பெருக்காக உருவெடுத்தது!
தாயும் ஓடிவந்து பத்மாவை அணைத்துக் கொண்டு, கண்ணீர் வடித்தாள்.
மெதுவாக பத்மாவை அழைத்துவந்து அருகிலிருந்த சோபாவில் அமர்த்தினர், பெற்றோர்!
தாயின் மடியில் முகம் புதைத்து பத்மா குலுங்கி அழுதபோது, பெற்றோருக்கு அவளை எப்படி ஆறுதல் அளிப்பது என தெரியவில்லை!
பெற்ற மகளின் நன்மையை உத்தேசித்து, அவளின் எதிர்காலம் மிகச் சிறப்பாக அமைய தாங்கள் எந்தவித தடையும் செய்யமாட்டோமென உறுதி அளிப்பதாக நினைத்து, அவளை சந்தோஷப்படுத்துவதற்குப் பதிலாக, காயப்படுத்தி விட்டோமோ என அஞ்சினர்!
ஆயினும், இப்படித்தான் தாங்கள் பெற்றோரின் கண்ணீரால் பாதிக்கப்பட்டு தங்கள் முடிவை கைவிட்ட தவறை செய்தோமோ, அதே தவறை செய்து இப்போது மீண்டும் மகளின் கண்ணீருக்காக கைவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தனர்.
துவக்கத்தில் இப்படித்தான் இருக்கும், போகப்போக சரியாகிவிடும் என தங்களை தேற்றிக் கொண்டனர்.
பத்மாவும், அதே நேரத்தில், அவர்கள் வாழ்வில் என்ன நடந்திருக்கும் என்பதை அறியும் ஆவலை கைவிட தீர்மானித்தாள்.
அதற்கு முக்கிய காரணம், ஏற்கெனவே அவர்களுக்கு பெற்றோர்களால் ஏற்பட்ட சோகம் போதும், தான் உறவினர்களிடம் விசாரிப்பதை அறிந்து அதனால் ஏற்படும் துயரம் வேண்டாம் என நினைத்தாள்.
பெற்றோர்தான் அப்படி, பெற்ற மகளுமா....?
எண்ணங்களை உதறிவிட்டு, தன் வாழ்வின் அடுத்த கட்ட நடவடிக்கைபற்றி திட்டமிட துவங்கினாள்.
வெறும் பி.ஏ. படிப்பு, தற்காலத்தில், வேலை கிடைக்க உதவாது, மேற்கொண்டு எம்.ஏ. படிப்பதா, அல்லது, எம்.பி.ஏ. படிப்பதா அல்லது கம்ப்யூட்டர் கல்வி பெறுவதா என யோசிக்கத் துவங்கினாள்.