வார்த்தைகூட இதுபற்றி பேசியதாகவும் தெரியவில்லை. அந்தப் பெண்ணிடம் மிகுந்த அன்பை செலுத்துகிறாய்! இதெல்லாம் என்ன நாடகம், அத்தை?"
" தர்மா! உனக்கும் எனக்கும் தெரியாமல், திடீர்னு ஒருநாள், உன் அப்பா இவளை அழைத்துக் கொண்டு வந்து, இவளை தன் மனைவி என அறிவித்தபோது, எனக்கு பேச்சே எழவில்லை. உன் அப்பாவிடம் பேசவே பிடிக்கவில்லை! அவனும் என்னிடம் இதுவரை எந்த விவரமும் சொல்லவில்லை! நானாக அவனை கேட்கவும் விருப்பமில்லை........"
" அத்தை! என் அம்மா இறந்து இருபத்திரண்டு ஆண்டுகள், இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமேயின்றி வாழ்ந்தவருக்கு, திடீர்னு எப்படி இந்த ஆசை வந்தது?"
" தர்மா! அதைவிட கொடுமை, இரண்டு வாரம் முன்பு, அந்தப் பெண்ணை இங்கே அழைத்து வந்தபிறகு, இன்னும் ஒருநாள்கூட உன் அப்பா இங்கே தங்காமல், வெளியூரில் சுற்றுகிறான். இவள் என்னென்ன ஆசைகளுடன் வாழ்ந்தாளோ! இவளைப் பெற்றவர்களின் கட்டாயத்தினால், இவளுக்கு இந்த கதி ஏற்பட்டுள்ளதா, அல்லது வேறு காரணத்தினால் இவளே இதற்கு சம்மதித்தாளா, ஒன்றும் தெரியவில்லைடா!"
" அத்தை! எனக்கு இந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. என் அப்பாவின் முகத்தைப் பார்க்கவே வெறுக்கிறேன். நான் வேறெங்கேயாவது தங்கிக் கொள்கிறேன்....."
" அவசரப்படாதே! என்ன, ஏது என்று நானே விசாரிக்கிறேன்."
" என்ன பயன், அத்தை? நடந்து முடிந்துவிட்டதே, அலங்கோலம்! இதை இனி மாற்றவே முடியாதே! எனக்கு அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை, நான் அனாதை! அப்பா இந்தப் பெண்ணுடன் வாழ்க்கை நடத்தித்தானே தீரவேண்டும்? அவர்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகளுடன் அப்பா சந்தோஷமாக வாழட்டும். நான் இனி இங்கிருந்தால், அத்தை! நான் என்ன செய்வேன் என எனக்கே தெரியாது, இந்தப் பெண்ணின் வாழ்வை சிதைத்தவரை நான் தண்டிக்கவும் தயங்கமாட்டேன்! அதனால், அத்தை! என்னை மன்னித்துவிடு! என்னை இத்தனை வருஷங்கள் அரும்பாடு பட்டு வளர்த்த உன்னைப் பிரிந்து செல்கிறேன்..........."
"அவசரப்படாதேடா! அப்பா டூரிலிருந்து திரும்பியதும், அவனிடம் பேசுகிறேன், பொறுமையாயிரு!"
" அத்தை! 'பொறுமையாயிரு!' ன்னு சொல்றியே, அப்படியே நான் பொறுமையாக இருந்தாலும், நடந்ததை இனி மாற்ற முடியுமா? எனக்கோ, இங்கிருக்கிற ஒவ்வொரு வினாடியும், நெருப்பிலே வேகறமாதிரி இருக்கு! பாவம்! அந்தப் பெண்ணை பார்க்கவே கஷ்டமாயிருக்கு, மனசுக்கு! அத்தை! நான் போகிறேன், என்னை தடுக்காதே!"
" போவதற்குமுன், நான் சொல்வதை கொஞ்சம் கேட்டுவிட்டு போகலாமா?"