" நீங்கள் என்னை தவறாக நினைத்ததில் ஆச்சரியமில்லை. இந்த சமுதாயம் அந்த அளவுக்கு கெட்டுப் போயிருக்கிறது.
குடும்பத்திலுள்ள உறவுகளைக்கூட உதாசீனப் படுத்திவிட்டு, பாலுணர்ச்சி வெறியில், தப்பு தப்பாக நடந்து கொள்கிறார்கள்.
ஆசிரியர்கள் மாணவிகளிடமும், துறவிகள் தங்களை நம்பிவந்த சீடர்களிடமும், காவல்துறையினர் அபலைகளிடமும், நிர்வாகிகள் தங்களின்கீழ் பணியாற்றும் ஊழியர்களையும், ஏன், நீதிபதிகளே தங்களிடம் பயிற்சி எடுக்கும் பெண்களிடமும், கேவலமாக நடந்து கொள்வதை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நாற்றமடிக்கும் சமூகத்தில் வாழ்கிற நான்மட்டும் வித்தியாசமாக இருப்பேன் என நீங்கள் நம்புவது கடினம்தான். பரவாயில்லை........"
" சரிடா, சிவராமா! இப்ப இந்தப் பெண்ணுக்கு எப்படி வாழ்வு தரப்போறே?"
" அது முக்கியமல்ல, பாட்டி! உங்க தம்பி என்னை எப்படிப்பட்ட ஆபத்திலிருந்து காப்பாற்றி ஆயிரம் மைல் தள்ளியிருக்கிற இங்கே அழைத்துவந்து அடைக்கலம் தந்திருக்கிறார் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்! சுருக்கமாகச் சொல்கிறேன்:
என்னைப் பெற்று வளர்த்த தாய், நெறியில்லா வாழ்வு நடத்தி, அதில் இளம்பெண்களை ஈடுபடுத்தி பணம் சம்பாதித்து வந்தாள், ஹைதராபாத்தில்!
அவளுக்கு விபசார புரோக்கர்களும், இளம் பெண்களை அயல்நாட்டினருக்கு விற்க உதவும் புரோக்கர்களும் கையாட்கள்!
நான் வயது வந்ததும், என் தாயின் பிடியிலிருந்து தப்பித்து, மும்பைக்கு வந்து, அங்கு எனக்கு வாழ்வு தர இறைவனே அனுப்பியதுபோல், ஒரு முதியவர் அழைத்ததும் அவரிடம் அடைக்கலம் அடைந்தேன்.
எனக்கு தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளே தெரியும். அந்த முதியவருக்கு, உருது, இந்தி மொழிகளே தெரியும். ஆகவே சைகையின் மூலமாகவே பழகி வந்தோம்.
அவருக்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் கம்பெனியில் என்னை வேலைக்கு அமர்த்தினார்.
உங்கள் தம்பி அங்கு வியாபார சம்பந்தமாக அடிக்கடி வருவார். அவருடன் நான் தமிழில் பேசி பரிச்சயமானேன்.
நாளடைவில், தற்செயலாக, என்னைப் பற்றிய முழு விவரங்களையும் கூறி, என்னை காப்பாற்ற முடியுமா என்று கேட்டேன்.
அவரும் காலம், நேரம் பார்த்து, நல்ல வழி காட்டுவதாக உறுதியளித்தார்.