சிறுகதை - வாடகை தோழி - ரவை
தினமும் மாலையில், ஒரு மணி நேரம், பனகல் பூங்காவில் நடைப் பயிற்சி செய்வது நரேனின் நெடுநாளைய பழக்கம்!
அப்படித்தான், அன்று, பனகல் பூங்காவை ஏழாவது முறை சுற்றிவந்தபோது, கிழக்கு திசையில் சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்த பெண், நரேனைப் பார்த்து புன்னகை செய்தாள்.
நரேனும் மரியாதை நிமித்தம், பதிலுக்கு புன்னகை செய்துவிட்டு, மேலே நடந்தார்.
எட்டாவது இறுதிச் சுற்றில் அந்த இடத்துக்கு வந்தபோது, அந்தப் பெண் இம்முறை, தன் அருகில் அமரும்படி சைகை செய்தாள்.
நரேனுக்கு என்ன செய்வதென புரியவில்லை. தயங்கி நின்றார்.
" பயப்படாதீங்க! நான் உங்களை ஒன்றும் செய்துவிட மாட்டேன்! கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருப்பதற்காகவே, அழைக்கிறேன்......."
பொறியில் சிக்கிய எலியாக, நரேன் ஏதும் பதில் பேசாமல், அவளருகில் அமர்ந்தார்.
" என் பெயர் ரஞ்சனி! நான் தொழில் முறையில், ஒரு வாடகை தோழி! என்னுடன் ஒரு மணி நேரம் வேடிக்கையாக, பொழுதுபோக்காக, பேசுவதற்கு, கட்டணம் ரூபாய் நூறு தரவேண்டும்....."
" வாடகை தோழியா? அப்படி எதுவும் நான் கேள்விப்பட்டதே யில்லையே....."
"அதனாலென்ன! இப்போது தெரிந்து கொள்ளுங்கள்! வாடகை தாய் கேள்விப்பட்டிருப்பீர்களே, அதேபோல வாடகை மனைவி, வாடகை பட்டிமன்ற பேச்சாளர், வாடகை ஆன்மீக சொற்பொழிவாளர், வாடகை கர்நாடக சங்கீத பாடகர், வயலினிஸ்ட், மிருதங்கிஸ்ட், வாடகை வழக்கறிஞர், ......அதுபோலத்தான், 'வாடகை தோழி!' இந்த உறவில் ஒரு பாதிப்பும் ஒருவருக்கும் இருக்காது. இருநூறு, முன்னூறு ரூபாய் டிக்கட் வாங்கி சினிமா பார்ப்பதுபோல........"
" அதுசரி, நிறைய பேர் பேச முன்வருவார்கள். ஆனால், பணம் தருவார்களா?"
" உங்களுக்கு இன்னும் இந்த உலகத்தைப் பற்றி எதுவும் தெரியவில்லை, எத்தனையோ இளைஞர்களுக்கு பெண்களுடன் பேசிக்கொண்டிருப்பதிலே, ஒரு சந்தோஷம்! அதற்காக, நூறு ரூபாய் செலவழிக்க தயங்கமாட்டார்கள்......."
" அப்படியா! என்னை ஏன் அழைத்தாய்?"
" நீங்களும் ஒரு ஆண்தானே! உங்களுக்கு மட்டும் பெண்களுடன் வேடிக்கையாக, பொழுதுபோக்காக, பேசிக்கொண்டிருக்க ஆசையில்லையா?"
" ரஞ்சனி! வீட்டில் எனக்கு மனைவி, மகன், மகளுடன் பேசவே நேரம் போதாது! மாலையில் 'வாக்கிங்' தவறாமல் செய்வது ஒன்றுதான் என் உடற்பயிற்சி. அதற்காகத்தான் வருகிறேன் தினமும் இங்கே!"