தனது பேச்சுத் திறமையால் ஆண்களை வசியம் செய்து, பணம் கறப்பவளா அல்லது வயிற்றுப் பிழைப்புக்காக, வேறுவழி தெரியாமல், இந்த நூதன தொழிலில் இறங்கியிருக்கிறாளா?
அவள் பேச்சும் நடத்தையும் அவளை படித்தவளாகவும் மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவளாகவும் காட்டுகிறதே, அவள் இந்த தொழில் செய்வது, அவள் குடும்பத்துக்கு தெரியுமா, தெரியாதா?
'வாடகை தோழி' என்கிற யுக்தியே அவளை ஒரு வித்தியாசமான பெண்ணாக காட்டுகிறதே, அவளுக்கு மேற்கொண்டு உதவி செய்வதா, வேண்டாமா?
இப்படி மனதில் நிறைய குழப்பத்துடன் நடந்தவர், தனது வீட்டையும் கடந்து போனபோது, அவருடைய மகன் "அப்பா!" என்றழைத்தபிறகுதான், விழித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.
வழக்கமாக செய்கின்ற அன்றாட அலுவல்களை கவனித்தாலும், மனம் என்னவோ மாலை நடந்த சம்பவத்தையே சுற்றி சுற்றி வந்தது!
இந்த சம்பவத்தை குடும்பத்துடன் இப்போதே பகிர்ந்து கொள்வதா, பிறகா, அல்லது கூடவே கூடாதா?
அடுத்தது, மறுநாள் ரஞ்சனியை சந்தித்தால், அவளுடன் பேசுவதா, வேண்டாமா?
பேசுவதற்கு பணம் தருவது, அவசியமா? ஆடம்பரமா? தவிர்க்கப்பட வேண்டியதா?
ஒருவேளை, ரஞ்சனி தனக்கு வலை வீசி சிக்கவைக்க திட்டமிடுகிறாளா, அல்லது, அவளுடைய ஏழ்மையை நம்புவதா?
ஒருவேளை, தன் மனம் ரஞ்சனியிடம் பறிபோய்விட்டதோ?
மனதை கட்டுப்படுத்த, அவளை சந்திப்பதையே தவிர்த்துவிடலாமா?
ச்சே! தான் அந்த அளவுக்கு பலவீனமானவன் அல்ல, ரஞ்சனியும் கெட்டவளல்ல!
அவள் சொன்ன அந்த ஒரு விஷயம் உண்மைதானே!
'இந்த சமூகத்திலே ஒரு லட்சம் நல்லவர்களிலே ஒரே ஒரு கயவன் அல்லது கறுப்பாடு என்பதுதான் விகிதாசாரம்' என்பது உண்மைதானே!
இந்த ஊடகங்கள்தான், லாப நோக்கத்தோடு, அந்த கயவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டி யாவரையும் அச்சுறுத்துகிறது!
இந்தியாவின் நூற்றுமுப்பது கோடி மக்கட் தொகையில், காமுகர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம்கூட இருக்காதே, அதாவது பதிமூன்றாயிரம் லட்சத்திலே ஒரே ஒருவர்!